என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிள்- கார் மோதல்: 2 வாலிபர்கள் பலி
மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 வாலிபர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக கார் டிரைவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே மணல்மேடு வக்காரமாரி வடக்கு தெருவை சேர்ந்தவர் வேம்புராஜன். இவருடைய மகன் கோவிந்தராஜன் (வயது 27). இவருடைய நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த சின்னதுரை மகன் செல்வம் (27), ராமலிங்கம் மகன் புருஷோத்தமன்(24). நேற்றுமுன்தினம் இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் கடலூர் மாவட்டம் முட்டம் பகுதிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து
மீண்டும் தங்கள் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். கொள்ளிடம் ஆற்றின் பாலத்தை கடந்து அவர்கள் வந்த போது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக கோவிந்தராஜன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து இருந்த செல்வம், புருஷோத்தமன் ஆகிய 2 பேருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் செல்வம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். படுகாயமடைந்த புருஷோத்தமனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார். கோவிந்தராஜன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இது குறித்து மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியை சேர்ந்த வேல்முருகன் மகன் ஆனந்தகீதன் (வயது 30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






