search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கடனை திருப்பி செலுத்தக்கோரி நெருக்கடி- வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

    ரூ.60 ஆயிரம் கடனுக்கு இரட்டிப்பு தொகை செலுத்தக்கோரி நெருக்கடி கொடுத்ததால் வாலிபர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    குடியாத்தம்:

    குடியாத்தத்தை அடுத்த சேத்துவண்டை கிராமம் ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் லத்தீப். இவரது மகன் பஷீர் (வயது 26), அப்பகுதியில் மாட்டு இறைச்சி பக்கோடா கடை நடத்தி வந்தார். பஷீர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் குடியாத்தம் காந்திநகர் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் ரூ.60 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த கடனுக்காக தினமும் அசலும் வட்டியும் செலுத்தி வந்துள்ளார்.

    கொரோனா மற்றும் ஊரடங்கு காலத்தினால் வியாபாரம் செய்ய முடியாததால் அவரால் தவணை தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை. வாங்கிய கடனுக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் செலுத்த வேண்டும் என பஷீரின் வீட்டிற்கு சென்று நிதி நிறுவனத்தினர் நெருக்கடி கொடுத்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் முன்னிலையில் தகாத வார்த்தைகளாலும் அவர்கள் திட்டியதால் அவமானம் அடைந்த பஷீர் மனம் உடைந்தார்.

    இந்த நிலையில் பஷீர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது அறையின் கதவை திடீரென தாழிட்டுக் கொண்டார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதவை தட்டியும் பஷீர் கதவை திறக்கவில்லை. இதனால் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றபோது மின்விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் பஷீர் இருந்தார். உடனடியாக அவரை தூக்கிலிருந்து மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது பஷீர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் திரண்டு பஷீரின் இறப்பிற்கு காரணமான நிதி நிறுவனத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனர். இதனையடுத்து அவர்களிடம் பேசிய குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன், கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் உள்ளிட்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    இது குறித்து பஷீரின் மனைவி ஆப்ரீன் அளித்த புகாரின் பேரில் குடியாத்தம் டவுன் போலீசார் இது தொடர்பாக பைனான்ஸ் நிறுவனத்தை சேர்ந்த சந்தோஷ்பாபு, சிவராமன், நந்தகுமார், நரேன் (35)உள்ளிட்ட 4 பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இவர்களில் நரேன் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×