search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூஜைக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் வாங்குவதை படத்தில் காணலாம்.
    X
    பூஜைக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் வாங்குவதை படத்தில் காணலாம்.

    ஆயுதபூஜையையொட்டி வேலூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

    வேலூரில் ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க நேற்று பொதுமக்கள் திரண்டனர். பூஜையையொட்டி பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
    வேலூர்:

    ஆயுத பூஜை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இத்தினத்தன்று தொழிலாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு பொரி, பழங்கள் வைத்து பூஜை செய்து வழிபடுவார்கள்.

    ஆயுத பூஜையில் பொரி, பழங்கள், சர்க்கரை, இனிப்புகள் வைத்தும், வாழை மரக்கன்றுகள் கட்டியும் பூமாலை அணிவித்தும், பூசணிக்காய் உடைத்தும் வழிபடுவார்கள். இதற்காக பொதுமக்கள் ஆயுத பூஜைக்கு தேவையான பூ, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக நேற்று பஜாருக்கு வந்திருந்தனர்.

    வேலூர் மண்டித்தெருவில் ஆயுத பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களை நடக்காமல் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை தடுக்கவும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவர்கள் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.

    ஆயுத பூஜையையொட்டி வேலூர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. அதன்படி பூக்களில் விலை கிலோவில் வருமாறு:-

    ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கி ரூ.200-க்கும், ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்தி 100-க்கும், 180-க்கு விற்பனை செய்யப்பட்ட ரோஜா 220-க்கும், 60-க்கு விற்பனை செய்யப்பட்ட கோழிக்கொண்டை 80-க்கும், 300-க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி ரூ.350-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் மல்லி, முல்லை ஆகியவை ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் மாற்றம் இல்லை என்றும் மழையின் காரணமாக பூக்கள் விலை உயர்ந்துள்ளது என்றும் பூ வியாபாரி ரமேஷ்பாபு தெரிவித்தார்.

    மேலும் பூசணிக்காய் ஒரு கிலோ ரூ.20-க்கும் வாழை மரக்கன்றுகள் ஜோடி ரூ.50 முதல் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல பொரி விற்பனையும் களைகட்டியது. ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி, கொய்யா போன்ற பழங்களின் விலையும் சற்று உயர்ந்து காணப்பட்டது.

    ஆயுதபூஜையை முன்னிட்டு பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் ஊழியர்கள் நேற்று பூஜை செய்தனர். மேலும் அரசு வாகனங்களுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.
    Next Story
    ×