search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்ணா (கோப்பு படம்)
    X
    தர்ணா (கோப்பு படம்)

    அரியலூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் ஆதரவாளர்களுடன் தர்ணா

    அரியலூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம் இருகையூர் ஊராட்சி தலைவர் தட்சிணாமூர்த்தி. இவர் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தனது ஆதரவாளர்களுடன் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அவர், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருப்பதால் தன்னை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மதிப்பதில்லை என்றும், அலுவலகத்திலும், ஊராட்சியிலும் எந்தப் பணியையும் செய்யவிடாமல் தடுத்து வருவதாகவும், எழுதப்படிக்க தெரியாது என்றால், ஏன் தேர்தலில் போட்டியிட்டீர்கள்? என்று ஒன்றிய ஆணையர் கேட்டது தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் கூறினார்.

    மேலும் ஊராட்சி நிர்வாகம் சார்ந்த கட்டிட பணியை செய்யவிடாமல் ஊராட்சி உறுப்பினர்கள் தடை செய்ததாகவும் குற்றம்சாட்டினார். இதனால் ஒன்றிய அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஒன்றிய ஆணையர் ஸ்ரீதேவி, தங்களுக்கு எந்த மனக்குறை இருந்தாலும் புகார் மனு எழுதி கொடுங்கள், சட்டரீதியாக விசாரித்து உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என்றார்.

    தா.பழூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து, போராட்டத்தை கைவிடும் படி அறிவுறுத்தினர். பின்னர் ஒன்றிய ஆணையர் ஸ்ரீதேவியிடம், தன்னை பணி செய்யவிடாமல் தடுத்தவர்கள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர் தட்சிணாமூர்த்தி புகார் மனு அளித்தார்.

    இதுகுறித்து ஒன்றிய ஆணையர் ஸ்ரீதேவி கூறுகையில், ஊராட்சி தலைவராக தட்சிணாமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் அவரது மகன், ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் தலையீடு செய்வதாக குற்றம்சாட்டி, இருகையூர் ஊராட்சி உறுப்பினர்கள் ஏற்கனவே பலமுறை மனுக்கள் அனுப்பியுள்ளனர். அது குறித்து நான் ஊராட்சி மன்ற தலைவரிடம் விசாரித்தபோது, தனக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்பதனால் தனது மகன் ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கவனித்து வருவதாக கூறினார்.

    அப்போது, தங்களுக்கு எழுத படிக்க தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி நீங்கள்தான். எனவே ஊராட்சி மன்ற தலைவர் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் நீங்கள் தான் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினேன். அதனையே அவர் எழுத படிக்க தெரியாமல் ஏன் ஊராட்சி மன்ற தலைவராக வந்தீர்கள்? என்று நான் கேட்டதாக கூறுகிறார்.

    ஊராட்சி மன்ற தலைவரின் பணிகளை அவருடைய மகன் செய்யக்கூடாது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றி அதன் நகலை எனக்கு அளித்துள்ளனர். அதனடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் வேளையில், தற்போது ஊராட்சி மன்ற தலைவர் தட்சிணாமூர்த்தி இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்றார்.

    தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் அவமதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில், அரியலூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் புகார் தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×