search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அதிகாரிகளின் பாலியல் துன்புறுத்தலால் காவலர் பயிற்சி கல்லூரியில் தற்கொலைக்கு முயன்ற திருநங்கை

    காவலர் பயிற்சி கல்லூரியில் அதிகாரிகளின் பாலியல் துன்புறுத்தலால் காவலர் பயிற்சி பெறும் திருநங்கை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவெறும்பூர்:

    தேனி மாவட்டத்தை சேர்ந்த 21 வயது திருநங்கை ஒருவர் சமீபத்தில் காவலராக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் உள்ள பெண் காவலர் பயிற்சி கல்லூரியில் கடந்த சில மாதங்களாக பயிற்சி பெற்று வருகிறார்.

    இந்தநிலையில் காவலர் பயிற்சி கல்லூரி முதல்வர், துணை முதல்வரால் அந்த திருநங்கை அடிக்கடி பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர், காவலர் பயிற்சி கல்லூரி டி.ஐ.ஜி.யிடம் தொலைபேசி மூலம் புகார் செய்தார். அதன்பேரில், தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் நவல்பட்டில் உள்ள கல்லூரிக்கு வந்து முதல்வர், துணைமுதல்வர் மற்றும் திருநங்கையிடம் நேரடியாக விசாரணை நடத்திச்சென்றதாக தெரிகிறது.

    இதுதொடர்பாக திருநங்கை யிடம் கேட்டு பயிற்சி கல்லூரி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த திருநங்கை தற்கொலை செய்துகொள்வதற்காக நேற்று காலை விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×