என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் பெண் கொலை- லாரி டிரைவர் வெறிச்செயல்

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் பெண்ணை வெடிக்கொலை செய்த லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் மொடச்சூர் சங்கரன் வீதியைச் சேர்ந்தவர் தமிழ்தாசன். இவரது மனைவி மேரி. இவர்களுக்கு அன்னமேரி, கஸ்தூரி, தமிழரசி, வர்ஷினி ஆகிய 4 மகள்கள் உள்ளனர்.

    கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தமிழரசன் இறந்து விட்டார். இதையடுத்து மேரி தள்ளுவண்டியில் ரெடிமேட் துணி மற்றும் பேன்சி பொருட்கள் விற்பனை செய்து வந்தார். மேரியின் மூத்த மகள் அன்னமேரிக்கு மட்டும் திருமணமாகி விட்டது. மற்ற 3 பேருக்கும் திருமணமாகவில்லை.

    3 பேரும் கோபி தாசம்பாளையம் அருகில் உள்ள ஒரு தனியார் மில்லில் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்தனர். மேரி கோபி ஒத்தக்குதிரை கள்ளியங்காட்டு மாரியம்மன் கோவில் அருகில் வசித்து வந்தார்.

    அவரது மகள்கள் அடிக்கடி மேரியை பார்க்க வந்துள்ளனர்.

    இந்த நிலையில் மேரியின் பக்கத்து வீட்டைச்சேர்ந்த ராணி என்பவரது வீட்டுக்கு பர்கூரை சேர்ந்த அவரது அண்ணன் மகன் லாரி டிரைவர் முருகன் என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது மேரியின் கடைசி மகள் வர்ஷினியை அவர் ஒருதலையாக காதலித்து வந்தார்.

    இது பற்றி தெரிய வந்ததும் மேரி லாரி டிரைவர் முருகனை கண்டித்தார். இதனால் முருகனுக்கு மேரி மீது கோபம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த முருகன் அடிக்கடி மேரிக்கு போன் செய்து வர்ஷினியை திருமணம் செய்து கொடுக்கவில்லை என்றால் நீங்கள் யாரும் உயிரோடு இருக்க முடியாது என்று மிரட்டியுள்ளார்.

    இதனால் முருகனுக்கு பயந்து மேரி மொடச்சூர் சங்கரன் வீதிக்கு மகள்களுடன் வீடுமாறி சென்றுவிட்டார்.

    நேற்று இரவு 7 மணியளவில் மேரி தனது வீட்டில் மூத்த மகள் அன்னமேரி அவரது கணவர் புஷ்பராஜ் ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு முருகன் மோட்டார் சைக்களில் வந்தார். அப்போதும் அவர் வர்ஷினியை திருமணம் செய்து வைக்க கோரி தகராறு செய்தார்.

    அதற்கு மேரி மறுத்தார். இதில் ஆத்திரமடைந்த முருகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மேரியை சரமாரியாக வெட்டினார்.

    இதைபார்த்த கணேசன் என்பவர் தடுக்க முயன்றார். அவரையும் முருகன் அரிவாளால் வெட்டினார். பின்னர் முருகன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    இதையடுத்து காயமடைந்த 2 பேரையும் மீட்டு கோபி அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட மேரி சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். காயத்துடன் கணேசன் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் பற்றி தெரிய வந்ததும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கோபி டி.எஸ்.பி.தங்கவேல், இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப் -இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவர் முருகனை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×