என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
வடலூர் அருகே சோகம் - கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி பலி
வடலூர் அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வடலூர்:
வடலூர் வள்ளலார் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 72). வாகனங்கள் சுத்தம் செய்யும் நிறுவனம் நடத்தி வந்தார். இவருடைய மனைவி சிவகாமி (66). சம்பவத்தன்று தட்சிணாமூர்த்திக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வடலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி தட்சிணாமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சிவகாமி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதனிடையே தட்சிணாமூர்த்தியின் உடலை மருத்துவமனையில் இருந்து உறவினர்கள் வீட்டுக்கு கொண்டு வந்தனர்.
அப்போது தனது கணவரின் உடலை கட்டிப்பிடித்து அழுது கொண்டிருந்த சிவகாமி, சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து இறந்தார்.
இதை பார்த்து பதறிய உறவினர்கள், அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து தட்சிணாமூர்த்தி, சிவகாமி ஆகியோரின் உடலை உறவினர்கள் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






