search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூர்வாரப்படாமல் உள்ள ஆவேரியை படத்தில் காணலாம்.
    X
    தூர்வாரப்படாமல் உள்ள ஆவேரியை படத்தில் காணலாம்.

    ஆவேரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி, சாலையோர பூங்கா அமைக்க கோரிக்கை

    ஜெயங்கொண்டத்தில் ஆவேரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி, சாலையோர பூங்கா அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்திற்கு சென்னை, மதுரை, சேலம், திருப்பூர், திருச்சி, பழனி, கும்பகோணம், விருத்தாச்சலம், மயிலாடுதுறை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ்சுக்காக ஏராளமான பயணிகள் பஸ் நிலையத்தில் காத்திருக்கின்றனர்.

    சில நேரங்களில் வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் தாமதமாக வருவதால் தாய்மார்கள், குழந்தைகளுடன் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் சிரமப்படுகின்றனர். குழந்தைகளும் விளையாட முடியாமல் பயணிகளின் நெருக்கடியில் அழுது கொண்டிருக்கின்றன. முதியவர்கள் காற்றோட்டமாக அமர வழியின்றி தவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த பஸ் நிலையம் அருகே மக்களின் நீராதாரமாக விளங்கும் ஆவேரி உள்ளது. நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில் வெட்டப்பட்டுள்ள ஆவேரியில் தற்போதும் சில கிணறுகளை காண முடிகிறது. ஏரியில் உள்ள கிணறுகளை மேலக்குடியிருப்பு, கீழக்குடியிருப்பு, கரடிகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள மக்கள் குடிநீருக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பயன்படுத்தி வந்தனர். தற்போதும் ஒரு சிலர் அந்த கிணறுகளில் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்கும் ஏரி தண்ணீர் பயன்படுத்தப்பட்டது.

    ஆனால் தற்போது ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி என ஏற்படுத்தப்பட்ட பல மாற்றங்களால் நகராட்சி பகுதிகளில் ஒன்றியம் மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட ஏரிகளில் சாக்கடை கலக்கிறது. ஏரியை சுற்றி அசுத்தம் செய்யப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே நகரை சுற்றியுள்ள ஏரிகளை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி, தூய்மைப்படுத்தி ஜெயங்கொண்டம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில் நீராதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

    அதேபோல் ஆவேரியை தூர்வாரி, கரையை பலப்படுத்தி சுற்றி கம்பிவேலி அமைத்து, அப்பகுதியில் இயற்கை உபாதைகள் கழிக்க தடை விதித்து, கரையை சுற்றிலும் மரக்கன்றுகள் நட வேண்டும். மேலும் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள், பஸ்கள் வரும் வரை காத்திருந்து இளைப்பாறுவதற்கு ஏற்றவாறு சாலையோர பூங்கா அமைக்க வேண்டும் என்று பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×