என் மலர்
செய்திகள்

திருமங்கலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி மர்ம மரணம்
திருமங்கலம்:
திருமங்கலம் அருகே உள்ள மைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(வயது34), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சுதா. இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர்.
முருகன் கடந்த 8 மாதங்களாக கோவை மாவட்டம் கிணத்துக்கடவை அடுத்த கொண்டம்பட்டி கிராமத்தில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தார். கொரோனா என்பதால் சொந்த ஊருக்கு வராமல் அங்கேயே தங்கி இருந்தார்.
இந்நிலையில் கோவையில் முருகன் நெஞ்சு வலியால் இறந்து விட்டதாக சுதாவுக்கு தகவல் தெரிவித்ததுடன் அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
முருகனின் உடலை இறுதிச் சடங்கிற்காக உறவினர்கள் அங்குள்ள சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர். அப்பொழுது தற்செயலாக அவரது உடலைப் பார்த்தபோது ஆங்காங்கே சிறு சிறு காயங்கள் தென்பட்டது. மேலும் காதில் ரத்தம் வழிந்த கரையும் இருந்தது. தலையின் பின்பக்கம், கண் பகுதி ஆகியவற்றில் ரத்தம் கசிந்ததிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து உறவினர்கள் உடனடியாக இறுதிச்சடங்கை நிறுத்தி விட்டு திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்
அதன் அடிப்படையில் திருமங்கலம் தாலுகா காவல் ஆய்வாளர் சிவசக்தி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.
முருகன் நெஞ்சுவலியால் இறந்தாரா? அல்லது அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.