என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தவளக்குப்பம் அருகே சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

    தவளக்குப்பத்தில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    பாகூர்:

    புதுவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொடிகட்டி பறந்த கஞ்சா விற்பனையை போலீசார் கட்டுப்படுத்தி இருந்தனர். ஆனால் தற்போது கஞ்சா விற்பனை மீண்டும் தலைதூக்க தொடங்கி விட்டது.

    கஞ்சா விற்பனை செய்யும் சமூக விரோதிகள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை கஞ்சா பழக்கத்துக்கு ஆளாக்கி அவர்களின் எதிர்கால வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர்.

    தற்போது மதுபாட்டில் விலை 2 மடங்கு விலை உயர்ந்து விட்டதை சாதகமாக்கி மது பிரியர்களை கஞ்சா போதைக்கு மாற்றி வருகின்றனர். குறிப்பாக கல்லூரி மாணவர்களை குறிவைத்து அவர்களுக்கு ஒரு கும்பல் கஞ்சா விற்பனை செய்து வருகிறது.

    மேலும், தற்போது கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களையும் இந்த பழக்கத்துக்கு ஆளாக்கு கின்றனர்.

    இதுகுறித்து அரசியல் கட்சியினர் மற்றும் சமூக இயக்கங்களை சேர்ந்தவர்கள் அரசிடம் எடுத்துக்கூறி கஞ்சா விற்பனையை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இதனை ஏற்று அரசு உத்தரவின்பேரில் போலீசார் அவ்வப்போது அதிரடி சோதனை நடத்தி கஞ்சா கும்பலை கைது செய்தாலும் தொடர்ந்து கஞ்சா விற்பனை குறையவில்லை.

    இந்த நிலையில் சுண்ணாம்பாறு அருகே இடையார்பாளையம் என்.ஆர்.நகரில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தவளக்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் என்.ஆர்.நகரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் 2 வாலிபர்கள் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர்.

    இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பரத் என்ற தமிழரசன் (வயது20), பூரணாங்குப்பம் நடுத்தெருவை சேர்ந்த அரவிந்தன்(19) என்பதும் இவர்கள் புதுவையை சேர்ந்த ஒருவரிடம் மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து சிறுசிறு பொட்டலங்களாக கட்டி சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்று வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 130 கிராம் கஞ்சா, செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த புதுவையை சேர்ந்த முக்கிய குற்றவாளியை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    Next Story
    ×