search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்ன அய்யம்பாளையம் அருந்ததியர் காலனியில் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி நின்றபோது எடுத்தபடம்.
    X
    சின்ன அய்யம்பாளையம் அருந்ததியர் காலனியில் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி நின்றபோது எடுத்தபடம்.

    நாமக்கல்லில் கொட்டித்தீர்த்த கனமழை- வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

    நாமக்கல்லில் கொட்டித்தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு நாமக்கல், கொல்லிமலை, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்தமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக நாமக்கல் கலெக்டர் அலுவலகம் பகுதியில் 135 மி.மீட்டர் மழைப்பதிவானது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    நாமக்கல் கலெக்டர் அலுவலகம்-135, நாமக்கல்-92, கொல்லிமலை-82, சேந்தமங்கலம்-65, எருமப்பட்டி-55, புதுச்சத்திரம்-46, ராசிபுரம்-28, திருச்செங்கோடு-26, குமாரபாளையம்-22, பரமத்திவேலூர்-20, மங்களபுரம்-8, மோகனூர்-2.

    மாவட்டத்தின் மொத்தமழை அளவு 581 மி.மீட்டர் ஆகும்.

    இந்த மழைக்கு நாமக்கல் சின்ன அய்யம்பாளையம் அருந்ததியர் தெருவில் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகுந்தது. மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதேபோல் சின்ன அய்யம்பாளையம் செல்லும் சாலையும் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நல்லிபாளையம், பெரிய அய்யம்பாளையம், சின்ன அய்யம்பாளையம், கருப்பட்டிபாளையம் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள் மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதால் தான் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து விடுகிறது என அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

    இதேபோல் நாமக்கல் வெள்ளவாரி தெரு மற்றும் மேட்டுத்தெரு பகுதியிலும் குடியிருப்பு பகுதியில் அதிகஅளவில் தண்ணீர் தேங்கி இருந்தது. இந்த இருபகுதிகளுக்கும் சென்ற நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம், சுகாதார அலுவலர் சுகவனம் மற்றும் குழுவினர் மழைநீரை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    நாமக்கல் மாவட்ட மைய நூலகம் கோட்டை சாலையில் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தின் பின்புற சுற்றுச்சுவர் நேற்று முன்தினம் பெய்த கனமழைக்கு திடீரென இடிந்து விழுந்தது. இதில் அங்கு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று சேதம் அடைந்தது. மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×