என் மலர்
செய்திகள்

கணவர் 2-வது திருமணம் செய்ததால் போலீஸ் நிலையத்தில் விஷம் குடித்த பெண்
தருமபுரி:
தருமபுரியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது30). செல்வராஜ் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் செல்வராஜ் விஜயலட்சுமிக்கு தெரியாமல் 2-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுத்து தனக்கு நிவாரணம் கிடைக்க செய்ய வேண்டும் என்று விஜயலட்சுமி தருமபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து இருந்தார். அதன் பேரில் நேற்று போலீஸ் நிலையத்தில் விசாரணை நடந்தது.
இதற்காக இருதரப்பினரும் போலீஸ் நிலையத்தில் அழைக்கப்பட்டிருந்தனர். அப்போது போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
கணவருடன் இணைந்து வாழ விருப்பம் இல்லை. அதனால் தனக்கும், தன்குழந்தையின் எதிர்காலத்துக்கும் உரிய நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என்று விஜயலட்சுமி கூறினார். ஆனால் அவரது கணவர் தரப்பு அதற்கு முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை.
இதனால் மனமுடைந்த விஜயலட்சுமி தனக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை எனக்கூறி அங்கேயே விஷத்தை குடித்தார்.
இதனை பார்த்த போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.