என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கியது
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கியது. பெரம்பலூரில் மேலும் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 1,368 பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனர். இதில், குணம் அடைந்த ஆயிரத்து 251 பேர் வெவ்வேறு தேதிகளில் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவரையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற 100 பேர் திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் உள்ள கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில், பெரம்பலூர் நகரை சேர்ந்த 5 பேர், கிராமிய பகுதிகளான ஆண்டி குரும்பலூர், ஆடுதுறை, வாலிகண்டபுரம், ஒதியம், சிறுவாச்சூர், கல்பாடி, சின்ன வெண்மணி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 8 பேர் என மொத்தம் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 13 பேரும் திருச்சி மற்றும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம், பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 381 ஆக உயர்ந்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 8 பேருக்கும், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் 4 பேருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 7 பேருக்கும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 3 பேருக்கும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 8 பேருக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சி மற்றும் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 26 பேருக்கும் என மொத்தம் 58 பேர் புதிதாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,967 ஆக உயர்ந்து 3 ஆயிரத்தை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை சிகிச்சையில் குணமடைந்து 1,972 பேர் வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி 31 பேர் இறந்துள்ளனர். நேற்று மொத்தம் 579 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Next Story