என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது இரும்பு கம்பியால் தாக்குதல் - மளிகை கடைக்காரர் உள்பட 3 பேர் கைது
ஊத்தங்கரை அருகே மது விற்பனையை தடுக்க சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை இரும்பு கம்பியால் தாக்கிய மளிகை கடைக்காரர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஜெய்கீர்த்தி (வயது 40). இவர் தற்போது ஊத்தங்கரை போலீஸ் உட்கோட்டத்தில் தனிப்பிரிவில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ஊத்தங்கரை அடுத்த கோவில் புதுப்பட்டி என்ற இடத்தில் உள்ள ஒரு மளிகை கடையில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கீர்த்தி சாதாரண உடையிலும், உடன் 2 போலீசார் சீருடையிலும் அங்கு சென்று, சுமன்(25) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் சோதனை செய்துள்ளனர். அப்போது சுமனுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சுமன், அங்கிருந்த இரும்பு கம்பியால் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கீர்த்தியின் தலை உள்ளிட்ட பகுதியில் தாக்கினார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உடன் சென்ற போலீசார், சுமனை பிடித்துள்ளனர். அவருக்கு ஆதரவாக வந்த அவரது உறவினர்களான அண்ணாமலை (41), அவரது மனைவி பரிமளா(35) ஆகியோரும் போலீசாரை ஆபாசமாக பேசி, பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இதுதொடர்பான புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார், சுமன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். மேலும் மளிகை கடையில் பதுக்கி வைத்திருந்த 80 பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
சுமன் தாக்கியதில் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கீர்த்தி, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்து, சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






