search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

    வேலூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாததால் மழைநீர் தேங்கி சேறும், சகதியாக காணப்படுகிறது. அந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வேலூர்:

    மத்திய அரசின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் வேலூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் கோட்டை சீரமைத்தல், பாதாள சாக்கடை திட்டம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் இணைப்பு, நவீன வாகன நிறுத்துமிடம் அமைத்தல், மழைநீர் கால்வாய் அமைத்தல், புதிய, பழைய பஸ்நிலையங்கள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மாநகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் காவிரி கூட்டு குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொக்லைன் எந்திரம் மூலம் சாலை மற்றும் தெருவோரங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, குழாய்கள் புதைக்கப்பட்டன. அதன்பின்னர் கூட்டு குடிநீருக்காக தோண்டப்பட்ட சாலைகள், தெருக்கள் முறையாக சீரமைக்கப்படவில்லை.

    இந்த நிலையில் வீடுகள், கடைகள், தங்கும்விடுதிகள், ஓட்டல்கள், வணிகவளாகங்கள் உள்ளிட்டவற்றின் கழிவுநீர் செல்வதற்கான பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேலூர் சத்துவாச்சாரி டபுள்ரோடு, சக்திநகர், ஆர்.டி.ஓ. அலுவலக சாலை, சாய்நாதபுரம், சங்கரன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக சாலைகள், தெருக்களின் நடுவே பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளங்கள் தோண்டப்பட்டு, அதன்பின்னர் பாதாள சாக்கடை தொட்டி கட்டப்படுகிறது. சில நாட்களுக்கு பின்னர் அந்த தொட்டிகளுக்கு ராட்சத குழாய்கள் மூலம் இணைப்பு கொடுக்கப்படுகிறது.

    இவ்வாறாக சாலைகள், தெருக்களில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சுற்றியுள்ள பகுதிகள் சரியாக மூடப்படவில்லை. மேலும் பள்ளங்களை ஒட்டி குவித்து வைக்கப்படும் மண்ணை சாலை முழுவதும் சமமாக பரப்பவில்லை. அதனால் மழைநீர் தேங்கி அப்பகுதி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. அதன்காரணமாக அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    இதுகுறித்து சத்துவாச்சாரி பகுதி-3 சக்திநகர் பொதுமக்கள் கூறுகையில், “பாதாள சாக்கடை பணிக்காக தோண்டிய பள்ளத்தை சுற்றி மண் கொட்டி சரியாக நிரப்பவில்லை. பள்ளம் தோண்டிய இடத்தில் காணப்பட்ட மண்ணை சாலை முழுவதும் பரப்பி சீரமைக்கவில்லை. பாதாள சாக்கடை திட்ட பணியாளர்கள் அவசர கதியில் செய்து விட்டு செல்கின்றனர். அதனால் சாலையின் நடுப்பகுதி மண் குவிந்து மேடாக காணப்படுகிறது. தற்போது பெய்து வரும் மழைநீர் செல்ல வழியில்லாமல் சாலையில் தேங்கி நின்று சேறும், சகதியுமாக உள்ளது.

    அதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைகிறார்கள். சில சமயங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் சகதியில் வழுக்கி விழுகிறார்கள். விவசாய நிலத்தை பயிரிடுவதற்கு உழவு செய்யப்பட்டது போன்று இந்த பகுதி காணப்படுகிறது. பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சிரமங்கள் ஏற்படாது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

    Next Story
    ×