என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் குறைந்த வட்டியில் கடன் உதவி - கலெக்டர் கதிரவன் தகவல்

    பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கப்படுவதாக கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

    தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் 2020-2021 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் அமைப்பினருக்கு கடன் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஈரோடு மாவட்டத்துக்கு ரூ.3 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் கடன் உதவி பெற விரும்புபவர்களின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும்.

    பொதுகால கடன் திட்டம், தனிநபர் கடன் திட்டம் மூலம் சிறு தொழில் மற்றும் வியாபாரம் செய்ய அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. இதில் ஆண்டுக்கு 6 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படும். பெண்களுக்கான புதிய பொற்கால திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்டுக்கு 5 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்.

    சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்களுக்கு தலா ரூ.60 ஆயிரம் வீதம் ஒரு குழுவுக்கு அதிகபட்சமாக ரூ.12 லட்சம் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு ஆண்டுக்கு 4 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும். சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். மேலும், மகளிர் திட்ட அதிகாரியால் தரம் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

    சுய உதவிக்குழுவில் உள்ள ஆண்களுக்கும் அதிகபட்ச கடன் தொகையாக தலா ரூ.60 ஆயிரம் வீதம் ஒரு குழுவுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை ஆண்டுக்கு 5 சதவீத வட்டியில் வழங்கப்படும். ஒரு கறவை மாடு வாங்க ரூ.30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகளுக்கு ரூ.60 ஆயிரம் வரை ஆண்டுக்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும்.

    இதேபோல் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் சார்பிலும் ரூ.1½ கோடி கடன் உதவி வழங்கப்பட உள்ளது. இந்த கடன் உதவியை பெற விரும்புபவர்கள் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளில் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சாதி, வருமான சான்றிதழ்கள், ரேஷன் கார்டு, ஆதார் அட்டைகளின் நகல்களை இணைத்து சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளில் ஒப்படைக்கலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
    Next Story
    ×