search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமி திருமணம் நிறுத்தம்
    X
    சிறுமி திருமணம் நிறுத்தம்

    சத்துவாச்சாரியில் பள்ளி மாணவி திருமணம் தடுத்து நிறுத்தம்

    வேலூர் செல்லியம்மன் கோவிலில் வருகிற 24-ந் தேதி பள்ளி மாணவிக்கு நடைபெற இருந்த திருமணத்தை சமூகநல அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரியில் 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு புகார் வந்தது அதன்பேரில், வேலூர் பெண்கள் ஒருங்கிணைப்பு சேவைமைய நிர்வாகி பிரியங்கா, சமூகநல அலுவலர்கள் ரம்யா, சங்கரி மற்றும் சத்துவாச்சாரி போலீசார் அங்கு சென்று விசாரித்தனர்.

    அதில், சத்துவாச்சாரி முருகன் தியேட்டர் தெருவில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியிருக்கும் 14 வயது சிறுமிக்கும், போளூரை சேர்ந்த 24 வயது வாலிபருக்கும் வருகிற 24-ந் தேதி வேலூர் செல்லியம்மன் கோவிலில் திருமணம் செய்ய ஏற்பாடு நடந்து வருவது தெரிய வந்தது.

    மேலும் விசாரணையில், பெங்களூருவில் தாயுடன் வசித்து வரும் சிறுமி 9-ம் வகுப்பு படித்து முடித்துள்ளதும், தந்தை இல்லாத காரணத்தால் மாணவிக்கு உடனடியாக உறவினரின் மகனுக்கு திருமணம் செய்து வைக்க தாயார் முடிவு செய்துள்ளார். அதனால் அவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மகளை அழைத்து சத்துவாச்சாரியில் உள்ள அவருடைய தாய் வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த மாதம் போளூரில் சிறுமிக்கு திருமணம் நடத்த முயன்றுள்ளார். இதனை அறிந்த சமூக நலத்துறை அதிகாரிகள் அதனை தடுத்து நிறுத்தினர். மேலும் மணமகன், மணமகள் குடும்பத்தினரை எச்சரித்து அனுப்பி உள்ளனர். கொரோனா தொற்று காரணமாக மாணவி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்படவில்லை.

    இந்த நிலையில் வருகிற 24-ந் தேதி வேலூர் செல்லியம்மன் கோவிலில் திருமணம் நடத்த இருவீட்டாரும் ஏற்பாடு செய்து வந்தனர். மாப்பிள்ளை உள்பட மணமகன் வீட்டாரை வேலூருக்கு பஸ் மூலம் வரவழைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் இந்த திருமணத்தில் மாணவிக்கு சிறிதும் விருப்பம் இல்லை. அவர் தொடர்ந்து படிக்கவே விரும்பி உள்ளார். அதனால் மாணவி தனது உறவினர் மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததும் தெரிய வந்தது.

    அதைத்தொடர்ந்து சமூகநல அலுவலர்கள், போலீசார் அந்த மாணவியின் தாயாரை அழைத்து 18 வயது நிரம்பாத பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். ஆனாலும் மாணவியின் தாயார் தனது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதில் உறுதியாக இருந்தார்.

    அதையடுத்து சமூகநல அலுவலர்கள், சிறுமி திருமணத்தை தடுத்து நிறுத்தும் விதமாக மாணவியை மீட்டு கொரோனா பரிசோதனை செய்து அரியூர் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
    Next Story
    ×