என் மலர்
செய்திகள்

முக கவசம்
முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
முக கவசம் அணியாமல் வந்த பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 46 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, இலவசமாக முககவசம் வழங்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்தந்த நாட்டின் அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது சென்னையில் அதிவேகமாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் அனைத்து கடைகள் திறக்கவும், பஸ்கள் இயக்கவும் சில தளர்வுகள் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து செல்லவும், திருமணம், துக்க நிகழ்வுகளில் ஏராளமானோர் கலந்து கொள்வதை தவிர்க்கவும் மாவட்ட கலெக்டர் ரத்னா ஆணை பிறப்பித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த நிலையில் ஜெயங்கொண்டம் கடை வீதிகளில் முக கவசம் அணியாமல் சாலையில் செல்பவருக்கு நகராட்சி நிர்வாகம் ரூ.100 அபராதம் கடந்த மாதம் அறிவித்தது அதன்படி அபராதமும் வசூலிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் அறச்செல்வி 4 ரோடு பகுதி கடைவீதிகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா?, முக கவசம் அணிந்து பொதுமக்கள் வருகின்றனரா? என திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது முக கவசம் அணியாமல் வந்த பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 46 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, இலவசமாக முககவசம் வழங்கப்பட்டது.
Next Story






