என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி ராஜ்பவன் குடியிருப்பில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.
    X
    ஊட்டி ராஜ்பவன் குடியிருப்பில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

    ஊட்டியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு

    ஊட்டியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.
    ஊட்டி:

    சென்னை வேளச்சேரி, மணலி ஆகிய பகுதிகளில் தங்கி பணிபுரிந்து வந்த 2 பேர், நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தனர். அவர்களிடம் சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்ததில், 2 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா தொற்று பாதித்த 2 பேர், ஊட்டியில் வசித்த ராஜ்பவன் குடியிருப்பு, நொண்டிமேடு ஆகிய 2 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஊட்டி நகராட்சியில் தனிமைப்படுத்தப்பட்ட ராஜ்பவன் குடியிருப்பு, நொண்டிமேடு ஆகிய பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தினமும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுகிறதா?, பிளச்சிங் பவுடர் போடப்படுகிறதா? என ஆய்வு செய்தார். மேலும் அங்கு வசிக்கும் மக்களிடம் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கிறதா?, முகக்கவசங்கள் வழங்கப்பட்டு உள்ளதா? என கேட்டறிந்தார்.

    இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் சுகாதார விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரியில் கொரோனாவால் 14 பேர் பாதிக்கப்பட்டு, உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு குணமடைந்தனர். தற்போது கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக விளங்கி வருகிறது. வெளியிடங்களில் இருந்து வருபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ராஜ்பவன் குடியிருப்பில் 8 வீடுகள், நொண்டிமேடு பகுதியில் 70 வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த பகுதிகளில் சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் வீடு, வீடாக சென்று சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் வைட்டமின்-சி, ஜிங்க் மாத்திரைகள், கபசுர குடிநீர், ஆர்சானிக் ஆல்பம் போன்றவை வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது ஊட்டி நகராட்சி கமிஷனர் சரஸ்வதி, பொறியாளர் ரவி, வருவாய் ஆய்வாளர் பொதிகைநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
    Next Story
    ×