search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தொற்று பரிசோதனை
    X
    கொரோனா தொற்று பரிசோதனை

    புதுக்கோட்டையில் தம்பதி உள்பட 3 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 18 ஆக உயர்வு

    புதுக்கோட்டையில் தம்பதி உள்பட 3 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அடப்பனவயல் பகுதியில் கைவண்டி தொழிலாளர் நகரை சேர்ந்த 48 வயதுடையவர் நகை மதிப்பீட்டாளராக உள்ளார். இவர் புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் இவருக்கும், 45 வயதுடைய அவருடைய மனைவிக்கும் சளி, காய்ச்சல் என கொரோனா அறிகுறி இருந்துள்ளது. இதனால் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் நேற்று முன்தினம் சேர்ந்தனர். அங்கு 2 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தம்பதிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து சிகிச்சைக்காக ராணியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் நகை மதிப்பீட்டாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர் பணிபுரிந்த வங்கியில் நேற்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் வங்கி செயல்பட்டு வரும் வணிக வளாகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்கள் மற்றும் கடைகள் அடைக்கப்பட்டன. அந்த வணிக வளாகத்தின் அருகே உள்ள தனியார் வங்கி மற்றும் கடைகள் பூட்டப்பட்டன.

    கொரோனா தொற்று உறுதியான நபர் வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். வங்கி மற்றும் அந்த பகுதி மூலம் நகராட்சி அதிகாரிகள் நேற்று கிருமி நாசினி தெளித்தனர். வளாகத்தின் முன்பு கயிறு கட்டி தடுப்புகள் அமைத்தனர்.

    தம்பதி வசிக்கும் பகுதியிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டன. அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. தம்பதிக்கு கொரோனா தொற்று வந்தது எப்படி? என்பது புதிராக உள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த கீரனூர் அருகே ஆள்வான்பட்டி கிராமத்தை சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் ராணியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 18-ந் தேதி ஊருக்கு வந்த அவரது வீட்டிற்கு உறவினர்கள் சிலர் வந்து சென்றுள்ளனர். மேலும் மகனின் பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். அப்போதும் உறவினர்கள் பலர் வந்து சென்றனர். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவரது மனைவி, தாய், குழந்தைகள் 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 15 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மாவட்ட மலேரியா அதிகாரி சுப்ரமணியன் தலைமையில் சுகாதார அதிகாரிகள், குழுவினர் அந்த பகுதியில் வீடு, வீடாக யாருக்காவது காய்ச்சல், சளி உள்ளதா? என ஆய்வு மேற்கொள்கின்றனர். அந்த பகுதி முழுவதும் தீயணைப்பு துறை வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் ஊருக்குள் செல்லும் பாதைகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக இருந்த நிலையில் மேலும் 3 பேர் மூலம் 18 ஆக உயர்ந்தது. மாலத்தீவில் இருந்து வந்தவர் உள்பட 7 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களில் 9 பேர் மராட்டிய மாநிலத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×