என் மலர்
செய்திகள்

கிருமாம்பாக்கத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இல்லை
பாகூர்:
கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மடுகரை அடுத்த தமிழக பகுதியான ராம்பக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தனர். அப்போது அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த வாலிபருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. உடனே அவர் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவலை அறிந்த உறவினர் வீட்டில் தங்கியிருந்த கிருமாம்பாக்கத்தை சேர்ந்தவர்கள் ராம்பக்கத்தில் இருந்து வீடு திரும்பினர்.
இந்த நிலையில் ராம்பாக்கம் பகுதிக்கு சென்று வந்தவர்களுக்கும் கொரோனா தொற்று இருக்குமோ என அச்சமடைந்து கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் போலீசார் ராம்பாக்கம் பகுதிக்கு சென்று வந்த 3 பேரையும் மருத்துவப் பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேருக்கும் டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பரிசோதனை செய்தற்கான முடிவு வெளியானது. அதில் 3 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதியானது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் வீடு திரும்பினார்கள் இதை அடுத்து அவர்கள் தொடர்ந்து 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்று கிருமாம்பாக்கம் சுகாதார நிலைய அதிகாரி தகவல் தெரிவித்தனர்.
மேலும் இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. மேலும் அவரவர்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் பல்வேறு நடவடிக்கைகளில் சுகாதார ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.






