search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏரியூர் பகுதியில் அறுவடை நடக்காததால் செடிகளில் பழுத்து உள்ள மிளகாய்களை காணலாம்.
    X
    ஏரியூர் பகுதியில் அறுவடை நடக்காததால் செடிகளில் பழுத்து உள்ள மிளகாய்களை காணலாம்.

    தொழிலாளர்கள் வேலைக்கு வராததால் செடியிலேயே காய்ந்து வீணாகும் மிளகாய்

    ஏரியூர், பெரும்பாலை பகுதிகளில் தொழிலாளர்கள் வேலைக்கு வராததால் மிளகாய் செடியிலேயே காய்ந்து வீணாகிறது. இதை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
    ஏரியூர்:

    தர்மபுரி மாவட்டத்தில் ஏரியூர், பென்னாகரம், பெரும்பாலை உள்பட பல்வேறு பகுதிகளில் மிளகாய் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக ஏரியூர், பெரும்பாலை, ராமகொண்டஅள்ளி, நாகமரை, வத்தலாபுரம், நெருப்பூர், செல்லமுடி, பூச்சூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் மிளகாய் சாகுபடி செய்து உள்ளனர். இங்கு சாகுபடி செய்யப்படும் மிளகாயை தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் சேலம், கொளத்தூர், மேட்டூர், ஈரோடு, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் அதிக அளவில் கொள்முதல் செய்வது வழக்கம்.

    இந்த ஆண்டு இப்பகுதியில் மிளகாய் சாகுபடி முடிந்த நிலையில் அறுவடை செய்யும் பருவத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் கொள்முதல் நடக்காததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்த மிளகாய் அறுவடை செய்யப்படாமல் செடிகளிலேயே காயும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் மிளகாயை அறுவடை செய்ய தொழிலாளர்கள் வராததால் செடியிலேயே காய்ந்து வீணாவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    இதுதொடர்பாக மிளகாய் சாகுபடி செய்துள்ள ஏரியூரை சேர்ந்த விவசாயி பிரபாகரன் கூறியதாவது:-

    ஏரியூரை சேர்ந்த எங்கள் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் மிளகாய் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது மிளகாய் அறுவடை சீசன் தொடங்கி உள்ளது. ஒரு ஆண்டுக்கு தேவையான மிளகாயை வியாபாரிகள் கொள்முதல் செய்வார்கள். ஊரடங்கு உத்தரவு காரணமாக மண்டிகள் மூடப்பட்டு உள்ளதால் மிளகாய் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் நடக்கவில்லை. இதனால் மிளகாயை கொள்முதல் செய்ய வியாபாரிகள் வரவில்லை. மிளகாய் அறுவடை செய்ய தொழிலாளர்களும் வருவது இல்லை. இதனால் மிளகாய் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.

    பழுத்த மிளகாய்கள் பறிக்கப்படாமல் செடிகளிலேயே காய்ந்து கீழே விழுந்து வீணாகி வருகிறது. மிளகாய் பழுக்கும்போதும் உரிய பருவத்தில் அறுவடை செய்தால் அடுத்தடுத்து 7 முறை வரை குறிப்பிட்ட இடைவெளியில் அறுவடை செய்வோம். விளைச்சலும் அறுவடையும் முறையாக நடந்தால் ஒரு ஏக்கரில் ரூ.3 லட்சம் வரை கூட வருமானம் கிடைக்கும். ஆனால் தற்போது அறுவடையை தொடங்க முடியாததால் கடும் நஷ்டத்திற்கு தள்ளப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் மிளகாய் சாகுபடி செய்து பாதிப்புக்குள்ளாகி இருக்கும் விவசாயிகளை கணக்கெடுத்து அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

    ராமகொண்டஅள்ளியை சேர்ந்த விவசாயி தங்கம்மாள்:-

    எங்கள் பகுதியில் இந்த ஆண்டு மிளகாய் குறிப்பிடத்தக்க விளைச்சலை கண்டு உள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் ஊரடங்கு உத்தரவால் அறுவடை தடைபட்டு விட்டது. அறுவடைக்கு தயாராக இருந்தும் கொள்முதல் செய்ய வியாபாரிகள் வர முடியாத நிலை உருவாகி உள்ளதால் விளைந்த மிளகாய்கள் செடிகளிலேயே காயும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடன் வாங்கி தான் சாகுபடி பணிகளை மேற்கொண்டு உள்ளோம். மிளகாய் அறுவடை மற்றும் கொள்முதலுக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும். மிளகாய் அறுவடை பாதிக்கப்படுவதால் நஷ்டமடையும் விவசாயிகளுக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×