என் மலர்
செய்திகள்

புதுச்சேரி முதலமைச்சர் நாராணசாமி
மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை: புதுவை முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தி வருவதால் பிரதமர் மோடியின் அறிவுரையை ஏற்று நேற்றுமுன்தினம் (22-ந்தேதி) நாடுதழுவிய சுயஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான இடங்களில் மாலை ஐந்து மணிக்கு மேல் மக்கள் பொது இடங்களில் அதிக அளவில் ஒன்று கூடினர்.
இதனால் பெரும்பாலான மாநிலங்கள் தங்களது மாநில எல்லைகளை மூடி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. புதுச்சேரியில் ஒரு நபர் கோரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை காரணமாக நேற்று மாலையில் இருந்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 31-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.
அதேவேளையில் அத்தியாவசிய பொருட்களுக்காக மெடிக்கல், மளிகைக்கடை, பால் விற்பனையகம் போன்றவை திறந்திருக்கும் என அறிவித்திருந்தார். ஆனால் கோரோனா தொற்று ஆபத்தை அறியாமல் ஊடரங்கு உத்தரவை பெரிதாக மக்கள் எடுத்துக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேற ஆரம்பித்தனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலின் நிலை 2-ம் கட்டத்தில் உள்ளது, சமூக பரவல் என்ற 3-ம் கட்டத்திற்கு உயர்ந்தால் மிகப்பெரிய சோதனையை சந்திக்க வேண்டியிருக்கும். இதனால் ஊடரங்கு உத்தரவை மீறி மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் சாவாலானதாக இருக்கும். மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Next Story






