search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார் நொருங்கி கிடப்பதை படத்தில் காணலாம்
    X
    கார் நொருங்கி கிடப்பதை படத்தில் காணலாம்

    ஈரோடு அருகே கார்கள் மோதல்: 2 பெண்கள் பலி - 7 மாத குழந்தை உள்பட 8 பேர் படுகாயம்

    ஈரோடு அருகே நள்ளிரவில் 2 கார்கள் மோதி கொண்ட விபத்தில் 2 பெண்கள் பலியாயினர். 7 மாத குழந்தை உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
    ஈரோடு:

    சேலம் மாவட்டம் பழைய சூரமங்கலம், அண்ணா தெருவைச் சேர்ந்தவர் விஜயவர்மன். இவரது மனைவி கவுரி (வயது35). இவர்களுக்கு தேவதிசா என்ற 7 மாத பெண் குழந்தை உள்ளது. இவரது உறவினர்கள் ஜோதி (55), சுவர்ணலகரி (19), ஜீவிதா (23), அனுசியா தேவி (25), சுபாதேவி (39), லட்சுமி (50), மித்ரா (7) ஆகியோர் நேற்று காலை கார் மூலம் சேலத்தில் இருந்து கோவை வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோக மையத்திற்கு சென்று அங்கு நடைபெற்ற சிவராத்திரி விழாவில் பங்கேற்றனர்.

    பின்னர் இவர்கள் அனைவரும் நள்ளிரவில் கோவையில் இருந்து சேலம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். காரை நவீன் குமார் என்பவர் ஓட்டி வந்தார்.

    தேசிய நெடுஞ்சாலை என்பதால் கார் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. காரில் இருந்த அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

    கார் இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு ஈரோடு மாவட்டம் நசியனூர் அடுத்த ஆட்டையாம்பாளையம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடத் தொடங்கியது.

    பின்னர் மத்தியில் இருந்த தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு எதிர்ப்புறம் ரோட்டில் சென்றது. எதிர்ப்புறம் கோவையிலிருந்து கேரளா பதிவு எண் கொண்ட கார் வந்து கொண்டிருந்தது. அந்த கார் மீது இவர்கள் வந்த கார் மோதி நின்றது இந்த விபத்தில் கவுரி சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். மற்ற அனைவரும் படுகாயமடைந்து உயிருக்காக போராடினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இதில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ஜோதி பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த நவீன்குமார் , ஜீவிதா, அனுசுயா தேவி, லட்சுமி, சுபா தேவி, சுவர்ண லகரி, 7 வயது குழந்தை மித்ரா, மற்றும் ஏழு மாத குழந்தை தேவதிசா ஆகியோர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் அனைவரும் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இந்நிலையில் மற்றொரு காரில் வந்த கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த உசேன் மோன் (38), உறவினர் முஸ்தபா ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கார் மோதியதில் முன்பகுதி மட்டும் சேதம் அடைந்திருந்தது.

    இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×