search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நளினி
    X
    நளினி

    பரோலில் வந்த நளினி 3வது முறையாக முருகனுடன் சந்திப்பு

    பரோலில் வந்த நளினி வேலூர் ஜெயிலில் முருகனை 3-வது முறையாக இன்று சந்தித்து பேசினார்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, மகளின் திருமணத்துக்காக, ஒரு மாதம் பரோலில் வெளியே வந்து, வேலூர் சத்துவாச்சாரியில் தங்கி உள்ளார்.

    தினமும் அவர், சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.

    சிறையில் இருக்கும்போது, 15 நாட்களுக்கு ஒரு முறை, அவரது கணவர் முருகனை சந்தித்து பேசுவது வழக்கம். ஆனால் இப்போது ஜெயிலில் விட்டு வெளியே இருப்பதால், பாதுகாப்பு காரணங்கள் காட்டி நளினி, முருகன் சந்திப்பு நடத்த போலீசார் அனுமதிக்கவில்லை.

    இந்த நிலையில் மகள் ஹரித்திரா திருமண ஏற்பாடுகள் குறித்து, முருகனுடன் பேச வேண்டியதுள்ளது. அதனால் முருகனை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என நளினி மனு அளித்தார். அந்த மனுவை, சிறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து நளினி, முருகன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று பரோலில் வந்து 3-வது முறையாக முருகன்-நளினி சந்திப்பு நடந்தது.

    சத்துவாச்சாரி புலவர் நகரில் தங்கியிருந்த நளினியை சத்துவாச்சாரி போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு கையெழுத்து போட்டதும், நளினியை பாதுகாப்புடன் வேலூர் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர்.

    நளினி, முருகன் சந்திப்பு காலை 11.20 மணி முதல் 12.20 மணிவரை 1 மணி நேரம் நடந்தது. சந்திப்பு முடிந்ததும், நளினியை சத்துவாச்சாரியில் அவர் தங்கியிருக்கும் வீட்டிற்கு போலீசார் அழைத்து சென்றனர்.

    வருகிற 25-ந் தேதியுடன் நளினி பரோல் முடிவடைகிறது. பரோலை நீட்டிக்க ஐகோர்ட்டு மறுத்துவிட்டதால் அன்று மாலை நளினி பெண்கள் ஜெயிலில் அடைக்கபடுவார்.


    Next Story
    ×