என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    காட்பாடி அருகே ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவி பலி

    காட்பாடி அருகே ஆட்டோவில் இருந்து தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    வேலூர்:

    காட்பாடி அடுத்த கீழ் வடுகன் குட்டையை சேர்ந்தவர் ராமமூர்த்தி. காட்பாடியில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடை வைத்துள்ளார். இவரது மகள் மதுமிதா (வயது12). குடியாத்தம் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

    தினமும் வீட்டிலிருந்து பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வந்தார். நேற்று வழக்கம் போல பள்ளிக்கு சென்று விட்டு ஆட்டோவில் வீடு திரும்பினார். ஆட்டோவில் அதிக மாணவர்கள் இருந்ததால் மதுமிதா டிரைவர் சீட்டில் ஒரு ஓரத்தில் அமர வைக்கப்பட்டார்.

    டிரைவர் சீட்டில் இருந்ததால் அவரால் சரியாக அமர முடியவில்லை. ஆட்டோ கீழ் வடுகன் குட்டையில் வந்தபோது அங்கிருந்த பள்ளத்தில் ஏறி இறங்கியது. அப்போது டிரைவர் சீட்டில் இருந்த மாணவி மதுமிதா தவறி கீழே விழுந்தார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    மாணவியை மீட்டு வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    காட்பாடி போலீசார் மாணவி உடலை மீட்டு பழைய காட்பாடியை சேர்ந்த ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர் மாவட்டத்தில் குறிப்பாக வேலூர் மாநகர பகுதிகளில் ஆட்டோக்களில் அதிக அளவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்கின்றனர். இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க போக்குவரத்து போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    அதிக அளவில் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
    Next Story
    ×