search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மர்ம நபர்களால் வெட்டி சாய்க்கப்பட்ட மரங்களை படத்தில் காணலாம்.
    X
    மர்ம நபர்களால் வெட்டி சாய்க்கப்பட்ட மரங்களை படத்தில் காணலாம்.

    திருப்பத்தூர் அருகே பழமையான மரங்கள் வெட்டி சாய்ப்பு- 4 பேரிடம் விசாரணை

    திருப்பத்தூர் அருகே உள்ள துளாவூரில் பழமையான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. இது குறித்து 4 பேரிடம் விசாரணை நடக்கிறது.
    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா இளங்குடி அருகே உள்ளது துளாவூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மடபதி ஊருணிக் கரையில் பழமை வாய்ந்த சந்தன கருவேலா என்று அழைக்கப்படும் நாட்டுக் கருவேல மரங்கள் உள்ளன. இதன் நிழல் பொதுமக்கள் மற்றும் ஆடு, மாடுகள் இளைப்பாறும் இடமாக விளங்கியது.

    திடீரென இந்த ஊருணியை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்த கிராமத்தினர் திருப்பத்தூர் தாசில்தார் தங்கமணிக்குத் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து அங்கு விரைந்து சென்று பார்த்த போது மரத்தை வெட்டிய மர்ம நபர்கள் தப்பியோடி விட்டனர். இது குறித்து இளங்குடி கிராம நிர்வாக அலுவலர் ராஜாசக்கரவர்த்தி குன்றக்குடி போலீசில் பார்த்திபன் என்பவர் மீது புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பார்த்திபன், சுந்தரேசன் உள்ளிட்ட 4 பேரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து திருப்பத்தூர் தாசில்தார் கூறுகையில், அரசு இயற்கைச் சூழலைப் பாதுகாக்க மரம் நடுதலில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் ஒரு கிராமத்தில் இவ்வளவு மரங்கள் வெட்டப்பட்டிருப்பது வேதனைக்குரிய விஷயம். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி கலெக்டர், தேவகோட்டை கோட்டாட்சியருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

    இதுபற்றி கிராம மக்கள் கூறும் போது, தலைமுறையாக நிழல் தந்த மரங்களை வெட்டியது வேதனையாக உள்ளது. நன்கு வளர்ந்த மரத்தை வெட்டி கொடுஞ்செயல் புரிந்தவர்கள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 
    Next Story
    ×