என் மலர்
செய்திகள்

திருப்பூரில் போலீஸ்காரர் சட்டை கிழிப்பு- புரோட்டா மாஸ்டர் கைது
திருப்பூர்:
திருச்சியை சேர்ந்தவர் முரளி (29). இவர் திருப்பூர் அனுப்பர் பாளையத்தில் ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.நேற்று இரவு இவர் மோட்டார் சைக்கிளில் திருப்பூர் அவினாசி ரோடு எஸ்.ஏ.பி. சிக்னல் வழியாக வந்தார். அவர் சிக்னலில் நிற்காமல் முன்புறம் இருந்த வாகன ஓட்டி மீது மோட்டார் சைக்கிளை மோதி நிறுத்தினார். அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த திருப்பூர் வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுந்தர மூர்த்தி தலைமையிலான போலீசார் முரளியை பிடித்து பரிசோதித்தனர்.
அவரை அருகில் உள்ள ஆஷர் மில் ரோட்டுக்கு விசாரணைக்காக போக்குவரத்து போலீஸ்காரர் பொன்னங்கன் அழைத்து சென்றார்.
அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் இருவரும் தாக்கி கொண்டனர். ஹெல் மெட்டால் தாக்கியதில் முரளியின் தலையில் ரத்தம் வடிந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த முரளி போக்குவரத்து போலீஸ்காரர் பொன்னங்கனின் சட்டையை கிழித்து அடித்து உதைத்தார்.இதில் அவரது தோளில் ரத்த காயம் ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் முரளியிடம் இருந்து பொன்னங்கனை விடுவிக்க முரளியை ரோட்டில் தரதரவென்று இழுத்து சென்றனர்.
இந்த நிலையில் முரளியின் தலையில் ரத்தம் வருவதை பார்த்த பொதுமக்கள் போலீஸ் மீது தான் தவறு உள்ளது என கருதி போலீசார் ஒழிக என கோஷமிட்டனர். எஸ்.ஏ.பி. சிக்னலில் 5 நிமிடம் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.
பின்னர் முரளியை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இது குறித்து போலீசார் கூறும் போது, முரளி குடிபோதையில் இருந்தார். போலீஸ்காரரை அவர் தான் தாக்கினார் என்றனர். பொதுமக்கள் கூறும்போது, முரளியை போலீசார் அடித்து இழுத்து சென்றது தவறு. போலீசையும் முரளி தாக்கி இருக்க கூடாது என்றனர்.
இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.