search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்னியாகுமரியில் சுற்றுலா பயணியின் காரை உடைத்து நகை, பணம் திருட்டு
    X

    கன்னியாகுமரியில் சுற்றுலா பயணியின் காரை உடைத்து நகை, பணம் திருட்டு

    கன்னியாகுமரியில் சுற்றுலா பயணியின் காரை உடைத்து நகை, பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

    கோடை விடுமுறை காலம் என்பதால் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் காரில் கன்னியாகுமரி வருகிறார்கள். அதிகாலையில் கன்னியாகுமரி வந்து சேரும் அவர்கள் பழைய பஸ் நிலையம் அருகே கார்களை நிறுத்தி விட்டு முக்கடல் சங்கம பகுதியில் சூரிய உதயம் பார்க்க செல்வது வழக்கம்.

    புதுக்கோட்டை மாவட்டம் சின்னையா நகரைச் சேர்ந்த சரவணன்(வயது36) என்பவரும் நேற்று அதிகாலை குடும்பத்துடன் காரில் கன்னியாகுமரி வந்தார்.

    சரவணன், அவரது காரை கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய பகுதியில் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் நிறுத்தினார். பின்னர் கார் கதவுகளை பூட்டி விட்டு சூரிய உதயம் பார்க்க கடற்கரைக்கு சென்றார்.

    திரும்பி வந்த போது காரின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. மேலும் காரின் சீட்டில் வைக்கப்பட்டிருந்த பேக்கும் மாயமாகி இருந்தது. அந்த பேக்கில் 4¼ பவுன் தங்க நகைகளும், ரூ.4500 ரொக்க பணமும் இருந்தது.

    காரின் கண்ணாடியை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது பற்றி சரவணன் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அவர் காரை நிறுத்தி விட்டு செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் தான் கார் கண்ணாடியை உடைத்து நகை, பணத்தை திருடி இருக்க வேண்டும் என்று சரவணன் கூறினார்.

    இது தொடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து சுற்றுலா பயணியிடம் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×