search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நல்லகண்ணு-கக்கன் குடும்பத்தினருக்கு மாற்று வீடு வழங்கப்படும் - தமிழக அரசு
    X

    நல்லகண்ணு-கக்கன் குடும்பத்தினருக்கு மாற்று வீடு வழங்கப்படும் - தமிழக அரசு

    நல்லகண்ணு மற்றும் கக்கன் குடும்பத்தினருக்கும் விரைவில் மாற்று வீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு தி.நகரில் குடியிருந்த அரசு வீட்டை காலி செய்ய சொன்னதால் அவர் வேறு வீட்டுக்கு சென்று விட்டார்.

    இந்த விவகாரம் தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. இதுகுறித்து அரசு அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    நகர அபிவிருந்தி கழகம் மூலம் 1953-ல் வாரியத்திற்கு சொந்தமான நிலத்தில் 119 வீடுகள் சி.ஐ.டி. காலனியில் கட்டப்பட்டு, பொதுமக்களுக்கு பொது ஒதுக்கீடு முறையில் வாடகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    2004-05ல் இந்த வீடுகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால், வீடுகளை இடித்து விட்டு ஒருங்கிணைந்த திட்டம் செயல்படுத்த வாரியம் முடிவு எடுத்தது.

    இந்நிலையில் நல்ல கண்ணுக்கு 2007-ம் ஆண்டு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவர் தமது சொந்த செலவில் கான்கீரிட் பழுதுகளை சரி செய்தும், கதவு, ஜன்னல் மற்றும் தர ஓடுகள் ஆகியவற்றை மாற்றம் செய்து குடியிருந்து வந்தார்.


    வீடுகள் மிகவும் பழு தடைந்த நிலையில் இருப்பதால், 2011-ல் வீட்டு வசதி துறை அமைச்சரால் தமிழ் நாடு சட்டசபையில், 119 குடியிருப்புகளை இடித்து விட்டு, புதிய வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்த அறிவிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து குடியிருப்புதாரர் அனைவருக்கும் குடியிருப்பை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து குடியிருப்புதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

    இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு அரசிடமிருந்து திட்ட ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு பெறும்வரை வீடுகளை காலி செய்யக் கூடாது என 2011-ல் உத்தரவு பிறப்பித்தது.

    இதைத் தொடர்ந்து 5-3-2012 அன்று அரசாணை வெளியிடப்பட்டு மீண்டும் குடியிருப்பதாரர்களுக்கு வீடுகளை காலி செய்ய 2-வது முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இதனை எதிர்த்து பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் விசாரணை செய்து 25.7.2014ல் ஐகோர்ட்டு 3 மாத காலக்கெடுவிற்குள் வீடுகளை காலி செய்யுமாறு உத்தரவிட்டு மனுக்களை தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து ஐகோர்ட்டில் சீராய்வு மனுதாக்கல் செய்யப்பட்டு அதுவும் 2015-ல் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து 27.4.2015ல் நிரந்தர உறுத்துகட்டளை ஆணை பெற்றனர்.

    மேற்கண்ட வழக்கு தொடர்ந்த நபர்கள் தவிர, மேலும் சிலர் சென்னை ஐகோர்ட்டில் புதிதாக 2016-ம் ஆண்டு வழக்குகள் தொடர்ந்தனர். அதனை 7.2.2017ல் தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

    இதன் மீது தொடர்ந்த மேல் முறையீடு மனுவும் 5.2.2018ல் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் இவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கினையும்,நிலுவையில் இருந்த வழக்குகளையும் ஒருங்கிணைத்து 5.2.2019ல் சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    இதைத் தொடர்ந்து குடியிருப்புதாரர்கள் வீடுகளை தாமாக முன்வந்து வாரியத்திடம் காலி செய்து ஒப்படைக்க தொடங்கினர். இதுவரை 96 குடியிருப்புதாரர்கள் வீடுகளை ஒப்படைத்துள்ளனர்.

    நல்லகண்ணு 15.5.2019 அன்று வீட்டை ஒப்படைத்தார். கக்கன் குடும்பத்தினர் இதுவரை வீட்டினை ஒப்படைக்கவில்லை.

    சமூகத்தில் முக்கிய பங்காற்றியவர்களுக்கு வாடகை அடிப்படையில் பொது ஒதுக்கீடு முறையில் வீடுகள் ஒதுக்கீடு வழங்குவது சம்பந்தமாக ஐகோர்ட்டின் வழிகாட்டுதலின்படி, புதிய கொள்கை இறுதி செய்யும் தருவாயில் உள்ளது.

    இக்கொள்கை இறுதி செய்யப்பட்ட உடன், நல்ல கண்ணு மற்றும் கக்கன் குடும்பத்தார் உள்பட இது போன்ற பொது வாழ்க்கையில் சமூகத்தில் முக்கிய பங்காற்றியவர்களுக்கு பொது ஒதுக்கீடு அடிப்படையில் வீடுகள் வழங்குவதற்கு வழிவகை செய்யப்படும்.

    நல்லகண்ணுவை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொலை பேசியில் தொடர்பு கொண்டபோது, அவர் கக்கன் குடும்பத்தினருக்கும் மாற்று வீடு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். துணை முதல்-அமைச்சரும், நல்லகண்ணு மற்றும் கக்கன் குடும்பத்தினருக்கும் விரைவில் மாற்று வீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

    Next Story
    ×