search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே மில் வேன் மோதி விவசாயி பலி
    X

    திண்டுக்கல் அருகே மில் வேன் மோதி விவசாயி பலி

    திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு பகுதியில் மில்வேன் மோதி விவசாயி பலியானார்.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகே தாடிக்கொம்புவைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 70). இவருக்கு சொந்தமான தோட்டம் முனியபிள்ளை பட்டியில் உள்ளது. தினமும் தோட்டத்துக்கு சென்று வருவது வழக்கம். இன்று காலை தனது தோட்டத்துக்கு சென்று விட்டு பைக் மூலம் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தார். முனியபிள்ளைபட்டி பிரிவு அருகே வரும் போது தனியார் மில் வேன் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு வந்தது.

    கண் இமைக்கும் நேரத்தில் ராமசாமி மீது மில் வேன் பயங்கரமாக மோதியது. இதில் படுகாயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தாடிக்கொம்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குபதிவு செய்து மில் வேன் டிரைவர் சசிகுமாரிடம் விசாரித்து வருகிறார்.

    தாடிக்கொம்பு பகுதியில் ஏராளமான தனியார் மில்கள் உள்ளன. இந்த மில்களுக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தொழிலாளர்கள் வேன் மூலம் அழைத்து வரப்படுகின்றனர். இந்த மில் வேன்களை ஓட்டும் டிரைவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாகவே இருப்பதால் அதிக வேகமாக செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

    அவர்கள் மட்டுமின்றி மற்ற வாகன ஓட்டிகளும் தொடர்ந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே இந்த மில் வேன்களை கண்காணித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×