search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டியில் ஒரு குடோனில் பலாப்பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள காட்சி.
    X
    பண்ருட்டியில் ஒரு குடோனில் பலாப்பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள காட்சி.

    பண்ருட்டியில் களைகட்டியது பலாப்பழம் சீசன் - ஒரு டன் ரூ.25 ஆயிரத்துக்கு விற்பனை

    பண்ருட்டியில் பலாப்பழம் சீசன் களைகட்டியது. ஒரு டன் பலாப்பழம் ரூ.25 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
    பண்ருட்டி:

    செம்மண் பாங்கான பூமியான பண்ருட்டி, பணிக்கன்குப்பம், சாத்திப்பட்டு, மாளிகம்பட்டு, கீழக்குப்பம், நடுக்குப்பம், பிள்ளையார்குப்பம், கீழ்மாம்பட்டு, மேல் மாம் பட்டு, காடாம்டபுலியூர், மருங்கூர், காட்டுக்கூடலூர், சிறுதொண்டமாதேவி, தாழம்பட்டு, காளிக்குப்பம், நடுவீரப்பட்டு, புலியூர்காட்டுசாகை, அரசடிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட ஹெக்டேர் நிலப்பரப்பில் பலா மரங்கள் உள்ளன. ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில்தான் பலாப்பழ சீசன் களை கட்டும்.

    கடந்த ஆண்டு போதிய அளவு பருவ மழை பெய்யாததால் பண்ருட்டி பகுதியில் உள்ள பலா மரங்கள் குறைந்த அளவே காய்த்துள்ளன. விளைச்சல் குறைந்திருந்த போதிலும் அறுவடை செய்யப்படும் பலாப்பழங்கள் விற்பனைக்காக வேன்கள், மினி லாரிகள், மாட்டு வண்டிகள் மூலம் தினமும் பண்ருட்டி மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் தற்போது பலாப்பழ சீசன் களை கட்டியுள்ளது.

    பண்ருட்டியில் உள்ள மொத்த வியாபாரிகள் பலாப்பழங்களை விவசாயிகளிடம் இருந்து வாங்கி வெளி ஊர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். பண்ருட்டியில் இருந்து மும்பை, ஆந்திரா, கர்நாடகா ஆகிய வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் தினசரி லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர். மேலும் பல வியாபாரிகள் பண்ருட்டிக்கு வந்து, பலாப்பழங்களை வாங்கிச்செல்கிறார்கள்.

    மழையில்லாததால் பலாமரங்களில் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் பலாப்பழங்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு விவசாயிகளிடம் இருந்து ஒரு டன் பலாப்பழம் ரூ.20 ஆயிரத்துக்கு வியாபாரிகள் வாங்கினர். ஆனால் இந்த ஆண்டு ஒரு டன் பலாப்பழம் ரூ.25 ஆயிரத்துக்கு வாங்கப்படுகிறது.

    Next Story
    ×