search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்ப்புத்தாண்டு - தலைவர்கள் வாழ்த்து
    X

    தமிழ்ப்புத்தாண்டு - தலைவர்கள் வாழ்த்து

    தமிழ்ப்புத்தாண்டையொட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். #TamilNewYear
    சென்னை:

    தமிழ்ப்புத்தாண்டையொட்டி பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு ஒருசில நாட்களுக்கு முன்பாக தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுவது மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது.

    தமிழர்கள் அனைவரும் தங்களது பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியப் பெருமை இவற்றையெல்லாம் பறிக்கிற அரசுகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

    இதை தமிழர்கள் அனைவரும் மனதில் கொண்டு மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெறுகிற அரசுகளுக்கு பாடம் புகட்டுகிற வகையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க தமிழ் புத்தாண்டில் சூளுரை மேற்கொள்ள வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன். தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    தாரைவார்க்கப்பட்ட காவிரி உரிமை உள்ளிட்ட எல்லா உரிமைகளும் மீட்கப்பட வேண்டும் என்பது தான் ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்தின் விருப்பம் ஆகும். அந்த விருப்பம் நிறைவேறவும், வளமான, மகிழ்ச்சியான தமிழகம் என்ற கனவு நனவாகவும் அற்புதமான வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. அதை நாம் சரியாக பயன்படுத்திக் கொண்டால் தமிழர்கள் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீசும். அதற்கு சித்திரைத் திருநாள் வகை செய்ய வேண்டும்; உணவு படைக்கும் கடவுளரான உழவர்கள் வாழ்விலும், உழைக்கும் தமிழர்கள் வாழ்விலும் புத்துணர்வும், புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்பட வேண்டும்; அதற்காக சரியான முடிவை எடுக்க இந்நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்வோம்.

    தமிழகத்திலும், அனைத்து இந்திய அளவிலும் ஒரு பெரிய மாற்றத்திற்கு கட்டியம் கூறுகின்ற வகையில் இந்த ஆண்டு சித்திரைத் திங்கள் மலர்கின்றது.

    மத்திய அரசின் கேடுகள் அனைத்தையும் எதிர்த்துப் போராடும் வலிமையைப் பெற்றுள்ள தமிழகம், நடைபெற இருக்கின்ற 17-வது பாராளுமன்றத் தேர்தல் களத்தில் ஆட்சியாளர்களுக்குப் பாடம் புகட்டுகின்ற வகையில் நல்ல தீர்ப்பு அளிக்கும்.

    தமிழ் மண்ணுக்குப் புதுப் பொலிவு ஊட்டிடக் கடமை ஆற்றுவோம்; களத்தில் வெற்றியும் காண்போம். தரணி எங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு சித்திரை முதல்நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

    மேலும் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், இந்திய ஜன நாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்ட தலைவர்களும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். #TamilNewYear
    Next Story
    ×