search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் சிவஞானம்
    X
    கலெக்டர் சிவஞானம்

    விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பிளக்ஸ் பேனர்கள் வைத்தால் ஜெயில் - கலெக்டர் எச்சரிக்கை

    விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி டிஜிட்டல் போர்டு, பிளக்ஸ், விளம்பர பதாகைகள் வைத்தால் ஜெயில் தண்டனை வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் இடைக்கால உத்தரவின் அடிப்படையில், டிஜிட்டல் போர்டு, பிளக்ஸ், விளம்பர பதாகைகள் வைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராசராஜன் முன்னிலையில் நடந்தது.

    டிஜிட்டல் போர்டு, பிளக்ஸ், விளம்பர பதாகைகள் வைப்பதற்கான பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.

    சென்னை உயர்நீதிமன்ற வழக்குகளில் வழங்கிய இடைக்கால உத்தரவின் அடிப்படையில் டிஜிட்டல் போர்டு, பிளக்ஸ், விளம்பர பதாகைகள் போன்றவைகளால், சாலையினை பயன்படுத்துவோர் மற்றும் வாகன ஒட்டிகளிடம் கவன சிதறலை ஏற்படுத்துவதாலும் சாலையினை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதாலும் விருதுநகர் மாவட்டத்திலுள்ள இணைப்புச் சாலைகள், சாலை சந்திப்புகள் பிளாட்பாரங்கள், நடைபாதைகள் மற்றும் மாவட்டத்திலுள்ள முக்கிய சாலைகள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனை அருகில் மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் போன்றவற்றில் அங்கீகாரம் பெற்ற மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், திருவிழாக்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகள் சார்பில் அனுமதியின்றி டிஜிட்டல் போர்டு, பிளக்ஸ், விளம்பர பதாகைகள் வைப்பதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தேவையான சமயங்களில் மட்டும் டிஜிட்டல் பேனர்கள் வைக்க வேண்டும். எந்த இடத்தில் வைக்க வேண்டும், யாரிடம் அனுமதி பெற வேண்டும், அவற்றை எப்பொழுது அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதை அனைவரும் நன்றாக அறிந்திருக்க வேண்டும். விண்ணப்பங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படுவதால், வெளிப்படை தன்மை உள்ளது.

    எனவே, விருதுநகர் மாவட்டத்தில் டிஜிட்டல் போர்டு, பிளக்ஸ், விளம்பர பதாகைகள் வைப்பதற்கு முன்பு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடமிருந்து முறையாக அனுமதி பெற வேண்டும். அச்சக உரிமையாளர்கள் டிஜிட்டல் போர்டு, பிளக்ஸ், விளம்பர பதாகைகள் பிரிண்ட் செய்ய வரும் நபர்களிடம் உறுதிமொழி பெற வேண்டும்.

    விதிகளுக்கு முரணாக பேனர், விளம்பர பதாகைகள் மற்றும் பிளக்ஸ் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் ரூ. 5000 அபராதம் அல்லது ஒரு வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் மற்றும் சிறை தண்டனை ஆகிய இரண்டும் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில், அனைத்து கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையாளர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள், விளம்பர அச்சக உரிமையாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள், காவல் துறையினர்கள் பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    Next Story
    ×