search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையைச் சேர்ந்த 5.11 லட்சம் ஏழைகளுக்கு தலா ரூ.2000 கிடைக்கும்
    X

    சென்னையைச் சேர்ந்த 5.11 லட்சம் ஏழைகளுக்கு தலா ரூ.2000 கிடைக்கும்

    சென்னையில் 5 லட்சத்து 11 ஆயிரம் ஏழை தொழிலாளர்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கு பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. #BPLFamiles #Rs2000SplAssistant
    சென்னை:

    வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று சட்ட சபையில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.



    இதைத் தொடர்ந்து மாவட்ட வாரியாக எத்தனை ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

    சென்னை மாநகரில் 15 மண்டலங்கள் உள்ளன. இந்த 15 மண்டலங்களிலும் எத்தனை ஏழைக் குடும்பங்கள் உள்ளன என்ற கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    இதில் சென்னை மாநகரில் 5 லட்சத்து 11 ஆயிரம் ஏழை தொழிலாளர்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கு பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

    சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தண்டையார்பேட்டை மண்டலத்தில் அதிகபட்சமாக 98 ஆயிரத்து 612 பேர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளனர். திருவொற்றியூர் மண்டலத்தில் 46,096 பேர் உள்ளனர்.

    மணலியில் 9,271 பேர், மாதவரம் பகுதியில் 16,323 பேர், ராயபுரம் பகுதியில் 41,958 பேர், திரு.வி.க. நகரில் 51,654 பேர் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கிறார்கள். அம்பத்தூர் மண்டலத்தில் 32,077 பேர் தலா ரூ.2 ஆயிரம் பெறும் நிலையில் உள்ளனர்.

    அண்ணாநகர் மண்டலத்தில் 25,804 பேர், தேனாம்பேட்டை பகுதியில் 46,685 பேர், கோடம்பாக்கம் மண்டலத்தில் 25,300 பேர், வளசரவாக்கம் பகுதியில் 16,250 பேர் ஏழைகள் பட்டியலில் உள்ளனர். அடையார் மண்டலத்தில் 62,552 பேர் ஏழை தொழிலாளர்களாக இருப்பது தெரியவந்துள்ளது.

    பெருங்குடி பகுதியில் 16,502 பேர், சோழிங்கநல்லூர் பகுதியில் 14,331 பேர் வறுமைகோட்டுக்கு கீழ் இருக்கிறார்கள். 15 மண்டலங்களிலும் மிக, மிக குறைவாக ஆலந்தூர் மண்டலத்தில் 7,473 பேர் ஏழை தொழிலாளர்களாக இருக்கிறார்கள்.

    15 மண்டலங்களிலும் நிறைய பேர் வறுமைகோட்டுக்கு கீழ் இருப்பதாக மனு செய்து இருந்தனர். அந்த மனுக்களை ஆய்வு செய்ததில் 11,953 பேர் போலி ஆவணங்கள் கொடுத்து இருப்பது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து அந்த 11,953 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. #BPLFamiles #Rs2000SplAssistant

    Next Story
    ×