search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலை முன்பு ஊழியர்கள் மறியல்
    X

    கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலை முன்பு ஊழியர்கள் மறியல்

    தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து ஊழியர்கள் தச்சூர்-பொன்னேரி சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள தச்சூர் கூட்டுச்சாலையில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு பொன்னேரியை அடுத்த வேம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 46) வேலை செய்து வந்தார். நேற்று காலை பணியில் இருந்த ஆனந்த குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரை தொழிற்சாலை நிர்வாகத்தினர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து செல்லும்படி கூறி உள்ளனர். ஆனால், ஆனந்தகுமாருக்கு உரிய மேல்சிகிச்சை அளிக்காமல் நிர்வாகத்தினர் அவரை மீண்டும் தொழிற்சாலைக்கு அழைத்து வந்ததாகவும், அப்போது மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்தநிலையில், உரிய மேல்சிகிச்சை அளிக்காததாக புகார் கூறி தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று மாலை தொழிற்சாலை முன்பு தச்சூர்-பொன்னேரி சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் நேரில் வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். போராட்டம் காரணமாக அங்கு ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×