search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போக்குவரத்தை ஒழுங்குபடுத்தாமல் செல்போனில் விளையாடும் சென்னை போலீஸ்காரர்கள்- ஐகோர்ட்டு நீதிபதி வேதனை
    X

    போக்குவரத்தை ஒழுங்குபடுத்தாமல் செல்போனில் விளையாடும் சென்னை போலீஸ்காரர்கள்- ஐகோர்ட்டு நீதிபதி வேதனை

    சென்னையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தாமல் போலீஸ்காரர்கள் செல்போனில் விளையாடுவதாக உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்தார். #MadrasHC
    சென்னை:

    ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் இன்று காலையில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்.

    அப்போது அரசு தரப்பில் குற்றவியல் வக்கீல் முகமது ரியாஸ் ஆஜராகி இருந்தார். அவரிடம் நீதிபதி, இன்று காலையில் ஐகோர்ட்டுக்கு வரும் வழியெல்லாம் போக்குவரத்து சிக்னல்களில் போக்குவரத்து போலீஸ்காரர்கள் இருந்ததை பார்த்தேன். அத்தனை பேரும், அங்கு சர்வ சாதாரணமாக உட்கார்ந்துக் கொண்டு செல்போனை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    யாரும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியை செய்யவில்லை. சிக்னலில் என்னுடைய கார் உள்பட ஏராளமான வாகனங்கள் நிற்கின்றன. பச்சை விளக்கு எரியத் தொடங்கியதும், அனைத்து வாகனங்களும் புறப்படும் நேரத்தில், ஒரு பெண்மணி சாலை குறுக்கே ஓடுகிறார். அதை கண்டுக் கொள்ளாமல், போலீஸ்காரர் செல்போனை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றார்.

    அப்போது குறுக்கிட்ட அரசு வக்கீல், அது எந்த சிக்னல் என்று கூறினால், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கிறேன் என்றார்.

    அதற்கு நீதிபதி, அந்த போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்காக இதை நான் கூறவில்லை. என்னைப் பொருத்தவரை பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு தான் முக்கியம். அந்த பெண்மணி மீது வாகனங்கள் மோதி இருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஒரு இடம் மட்டுமல்ல, சென்னை முழுவதும் 99 சதவீத போக்குவரத்து போலீஸ்காரர்கள் வேலை செய்வது இல்லை.


    சாலையோரம், சிக்னல் அருகே உள்ள இரும்பு சேரில் உட்கார்ந்துக் கொண்டு போன் பேசுவது அல்லது போனில் வாட்ஸ்அப் பார்ப்பது, இதை தான் செய்கின்றனர். சாலையில் செல்லும் உயர் போலீஸ் அதிகாரிகளும் இதை கண்டு கொள்வது இல்லை. அதற்காக இந்த நிலையை இப்படியே விட்டு விடவும் முடியாது என்று கூறினார்.

    பின்னர், நீதிபதிகள் தன் மேஜைக்கு மேல் செல்போன்களை வைத்துக் கொண்டு, வழக்கு விசாரணைகளுக்கு இடைஇடையே செல்போனை நோண்டிக் கொண்டிருந்தாலோ, பேசினாலோ எப்படி இருக்கும்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஆகியோரிடம் இந்த நிலவரத்தை கூறுங்கள். அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? என்பதை வருகிற 30-ந்தேதி எனக்கு தெரியப்படுத்த வேண்டும்’ என்று அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டார். #MadrasHC
    Next Story
    ×