search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயக்குமார்
    X
    ஜெயக்குமார்

    எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்தில் வாலிபர் மரணம்- மாஜிஸ்திரேட்டு விசாரணை

    எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #EsplanadePoliceStation
    சென்னை:

    சென்னை கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகன் ஜெயக்குமார் (20). பிராட்வேயில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். அந்த கடையில் அவருடன் அஜித்குமார், விக்னேஷ் ஆகிய வாலிபர்களும் வேலை செய்து வருகிறார்கள். கடையின் மேல்பகுதியில் குடியிருப்பு பகுதி உள்ளது. மாடியில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் நகை திருட்டு போய் உள்ளது.

    இது தொடர்பான புகாரின் அடிப்படையில் எஸ்பிளனேடு போலீசார் ஜெயக்குமார் உள்பட 3 பேரையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர். போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து வந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் ஜெயக்குமார் இறந்துவிட்டார். ஜெயக்குமார் உடல்நலக்குறைவால் இறந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


    ஆனால், அவரை போலீசார் லாக்கப்பில்  வைத்து அடித்து கொன்றுவிட்டதாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மற்ற இருவரையும் விடுவிக்க வலியுறுத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

    இந்நிலையில், எஸ்பிளனேடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குணசேகரனை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    வாலிபர் ஜெயக்குமார் இறந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்காக மாஜிஸ்திரேட்டு ஆனந்தன்  நியமிக்கப்பட்டார். அவர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். உயிரிழந்த வாலிபரின் பெற்றோரிடமும், எஸ்பிளனேடு போலீசாரிடமும் விசாரணை நடத்தினார்.   #EsplanadePoliceStation 
    Next Story
    ×