search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அருகே விபத்து- தனியார் மருத்துவமனை மேலாளர் பலி
    X

    மேட்டூர் அருகே விபத்து- தனியார் மருத்துவமனை மேலாளர் பலி

    மேட்டூர் அருகே இன்று அதிகாலை கார் மரத்தில் மோதிய விபத்தில் தனியார் மருத்துவமனை மேலாளர் பலியானார்.

    மேட்டூர்:

    ஆந்திர மாநிலம், விஜயவாடாவிலிருந்து ஒரு காரில் அய்யப்ப பக்தர்கள் 6 பேர் மேட்டூர் வழியாக சபரிமலைக்கு சென்றனர். இந்த காரை அசோக் என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த கார் ஈரோடு மாவட்டம் சின்ன பள்ளம் என்ற இடத்தில் சென்ற போது இன்று அதிகாலை 2.30 மணி அளவில் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி ரோட்டில் ஓரமாக இருந்த புளிய மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த அய்யப்ப பக்தர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த ஈரோடு அம்மாப்பேட்டை போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த விஜயவாடா, ராமலிங்கேஸ்வரர் நகரைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை மேலாளர் ஆஞ்சினேலு (வயது 32) சம்பவ இடத்திலேயே பலியானார். இறந்த ஆஞ்சினேலுக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்த விபத்து குறித்து ஈரோடு அம்மாப்பேட்டை இன்ஸ்பெக்டர் குமரேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    Next Story
    ×