search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3 போலீஸ் அதிகாரிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம்- மனித உரிமை ஆணைய நீதிபதி உத்தரவு
    X

    3 போலீஸ் அதிகாரிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம்- மனித உரிமை ஆணைய நீதிபதி உத்தரவு

    கடை உரிமையாளரை தாக்கி நகைபறித்த 3 போலீஸ் அதிகாரிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, மனித உரிமை ஆணைய நீதிபதி துரைஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கடைவீதியை சேர்ந்தவர் செல்வராசு (வயது 52). இவர் அப்பகுதியில் நகைக்கடை மற்றும் நகை அடகு கடை வைத்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி செல்வராசு வழக்கம்போல் தனது கடையில் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு சென்ற ஒரு போலீஸ்காரர், காரில் அமர்ந்திருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் உங்களை கூப்பிடுகிறார் என அழைத்துள்ளார்.

    இதையடுத்து செல்வராசு அங்கு சென்றபோது, காருக்குள் அமர்ந்திருந்த அரியலூர் மாவட்டம் திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னன், அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேலு ஆகியோர் வலுக்கட்டாயமாக செல்வராசை போலீஸ் ஜீப்பில் ஏற்றிச்சென்று திருட்டு நகையை வாங்கியதாக கூறி, அவரை தாக்கி அவர் அணிந்திருந்த 9 பவுன் தங்க நகை மற்றும் ரூ.15 ஆயிரம் பணத்தை பறித்துக்கொண்டு விடுவித்தார்கள்.

    இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான செல்வராசு, தன்னிடம் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட 3 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணைய நீதிபதி துரைஜெயச்சந்திரன், மனுதாரர் குறிப்பிட்ட போலீஸ் அதிகாரிகள் 3 பேரும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட செல்வராசுக்கு அரசு இழப்பீடாக ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்.

    அந்த தொகையை குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகள் 3 பேரிடம் இருந்தும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் வசூல் செய்து வழங்க வேண்டும் என்றும், மேலும் 3 பேர் மீதும் துறைரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

    இதில் மன்னர்மன்னன் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை இன்ஸ்பெக்டராகவும், சிவராஜ் நாகப்பட்டினம் மாவட்டம் கீழவேளூர் இன்ஸ்பெக்டராகவும், ராஜவேலு அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராகவும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    Next Story
    ×