search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்மிடிப்பூண்டி அருகே மதுக்கடை திறக்க பெண்கள் எதிர்ப்பு- ஆண்கள் ஆதரவு
    X

    கும்மிடிப்பூண்டி அருகே மதுக்கடை திறக்க பெண்கள் எதிர்ப்பு- ஆண்கள் ஆதரவு

    கும்மிடிப்பூண்டி அருகே மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆண்கள் மதுக்கடைக்கு ஆதரவளித்து கோஷம் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கெட்டனமல்லி கிராமத்தில் கடந்த 12-ந்தேதி அரசு மதுக்கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதனை அறிந்த அந்த பகுதி பெண்கள் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து மதுக்கடை திறப்பது கை விடப்பட்டது.

    ஆனால் கடந்த 17-ந்தேதி அந்த மதுக்கடை திறக்கப்பட்டது. கிராம பெண்கள் கடையை திறக்க கூடாது என முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் மதுக்கடை மூடப்பட்டது.

    ஆனால் சில ஆண்கள் குடியிருப்புகள் இல்லாத இடத்தில் மதுக்கடையை திறக்க வேண்டும் என்று அங்கு வந்து கோ‌ஷம் போட்டனர். தங்களது கோரிக்கையை நிறைவேற்றகோரி கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    இந்த நிலையில், மதுக்கடை வேண்டாம் என்று போராட்டம் நடத்திய பெண்கள், மதுக்கடை வேண்டும் என கோரிக்கை வைத்த ஆண்கள் என இரு தரப்பினருக்கான சமாதானப்பேச்சு வார்த்தைக்கூட்டம் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது.

    தாசில்தார் சுரேஷ் தலைமையில் நடந்த இந்த கூட்டத்துக்கு மண்டல துணை தாசில்தார் உமா சங்கரி முன்னிலை வகித்தார். இந்த பேச்சுவார்த்தையின்போது அரசாங்க விதிகளின்படி அமைக்கபட்டுள்ள மதுக்கடையை திறப்பதால் எந்த வித பிரச்சினையும் ஏற்படாது என்று தாசில்தார் தெரிவித்தார்.

    இதனைக்கேட்ட பெண்கள், அந்த வழியாக பள்ளி மாணவர்களும், பெண்களும் செல்கிறார்கள். எனவே, மதுக்கடையை அந்த பகுதியை விட்டு வேறு பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என கோ‌ஷம் போட்டனர்.

    இதைகேட்ட ஆண்கள் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் கூட மதுக்கடையை வைக்க முடியாவிட்டால் வேறு எங்கு வைப்பது? நாங்கள் எங்கு சென்று குடிப்பது? என கேள்வி எழுப்பினர். இரு தரப்பினர்களும் ஆளுக்கொரு பேச்சாக பேசியவாறு கோ‌ஷம் போட்டதால் சமாதானக்கூட்டத்தில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது.

    இதையடுத்து மதுக்கடை அமைப்பது தொடர்பான சமாதானக்கூட்டத்தை தாசில்தார் ஒத்தி வைத்தார். இது தொடர்பான முடிவை பொன்னேரி கோட்டாட்சியர் எடுப்பார். அதுவரை மதுக்கடை திறக்கப்படாது எனவும் தாசில்தார் உறுதி அளித்தார். இதை தொடர்ந்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனர். போலீஸ் பாதுகாப்புடன் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. #tamilnews
    Next Story
    ×