search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு - தமிழகம் முழுவதும் 6 லட்சம் பேர் எழுதினர்
    X

    டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு - தமிழகம் முழுவதும் 6 லட்சம் பேர் எழுதினர்

    தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை 6 லட்சம் பேர் எழுதினார்கள். ஒரு பதவிக்கு 500 பேர் போட்டியிடுகின்றனர்.
    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) 1,199 ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான குரூப்-2 தேர்வு(நேர்முகத்தேர்வு உள்ளடக்கிய) குறித்த அறிவிப்பை கடந்த ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வெளியிட்டது.

    இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 35 ஆயிரத்து 212 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தன. இதில் 8 ஆயிரத்து 242 விண்ணப்பங்கள் முறையாக பூர்த்தி செய்யவில்லை என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டு, மீதம் உள்ள 6 லட்சத்து 26 ஆயிரத்து 970 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

    இதில் 3 லட்சத்து 54 ஆயிரத்து 391 ஆண் விண்ணப்பதாரர்களும், 2 லட்சத்து 72 ஆயிரத்து 569 பெண் விண்ணப்பதாரர்களும், 10 மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்குவர். தேர்வு எழுத தகுதிபெற்ற 6 லட்சத்து 26 ஆயிரத்து 970 பேரில், 4 லட்சத்து 81 ஆயிரத்து 80 பேர் தமிழ் வழியிலும், 1 லட்சத்து 45 ஆயிரத்து 890 பேர் ஆங்கில வழியிலும் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து இருந்தனர்.



    இவர்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் 116 மையங்கள் மூலம் 2 ஆயிரத்து 268 இடங்களில் நேற்று நடந்தது. தமிழகம் முழுவதும் இந்த தேர்வுகளை கண்காணிக்க 2 ஆயிரத்து 94 தலைமை கண்காணிப்பாளர்களும், அவர்களுக்கு கீழ் 31 ஆயிரத்து 349 கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர். தேர்வு நடந்த 2 ஆயிரத்து 268 இடங்களிலும் வீடியோ பதிவும் செய்யப்பட்டது. தேர்வில் முறைகேடுகளை தடுக்க 254 பறக்கும் படையினரும், 413 நடமாடும் குழுக்களும் நியமித்து இருந்தனர்.

    தேர்வுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர்களாக கலெக்டர்களும், ஒருங்கிணைப்பாளராக மாவட்ட வருவாய் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு இருந்தனர். சென்னையில் மட்டும் 247 இடங்களில் குரூப்-2 தேர்வு நடைபெற்றது. மொத்தம் 64 ஆயிரத்து 309 பேர் சென்னையில் இந்த தேர்வை எழுதினர்.

    காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு பிற்பகல் 1 மணி வரை என 3 மணி நேரம் நடைபெற்றது. சென்னை மாவட்ட கலெக்டர் அ.சண்முகசுந்தரம் ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ராணி மெய்யம்மை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை பார்வையிட்டார். தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக தேர்வுக்கு வந்த தேர்வர்கள் கையில் செல்போன், கால்குலேட்டர் ஆகிய மின்சாதன பொருட்கள் எடுத்து செல்கின்றனரா? என்பதெல்லாம் தேர்வு நடந்த இடங்களில் கண்காணிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

    தேர்வு முடிந்து வெளியே வந்த தேர்வர்களிடம் கேட்டபோது, ‘பொது தமிழ் மற்றும் ஆங்கிலம் பகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள் அனைத்தும் எளிதாக இருந்தது. ஆனால் பொது அறிவு பகுதியில் சில வினாக்கள் கடினமாக கேட்கப்பட்டு இருந்தது’ என்று தெரிவித்தனர். நடப்பு நிகழ்வுகள் பகுதியில் லோக் ஆயுக்தா பற்றியும், மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாகவும், சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பு பற்றியும் வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன.

    1,199 காலிப்பணியிடங்களுக்கு 6 லட்சத்து 26 ஆயிரத்து 970 பேர் தேர்வு எழுத தகுதி பெற்று இருந்தனர். அவர்களில் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேற்று தேர்வு எழுதியதாக டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் தெரிவித்தது. அந்த அடிப்படையில் வைத்து பார்க்கும் போது ஒரு பதவிக்கு 500-க்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர்.

    எழுத்து தேர்வு முடிவுற்ற நிலையில், இந்த தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்படும் என்றும், அதனைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்முகத்தேர்வும் நடைபெற இருக்கிறது என்றும் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×