search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோயம்பேட்டில் இருந்து பஸ்கள் இயங்குவதால் மாதவரம் புதிய பஸ் நிலையம் வெறிச்சோடியது
    X

    கோயம்பேட்டில் இருந்து பஸ்கள் இயங்குவதால் மாதவரம் புதிய பஸ் நிலையம் வெறிச்சோடியது

    மாதவரம் புதிய பஸ் நிலையம் தொடங்கப்பட்ட நிலையிலும் கோயம்பேட்டில் இருந்து பஸ்களை இயக்கி வருவதால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

    மாதவரம், அக்.19-

    சென்னை கோயம்பேடு புறநகர் பஸ்நிலையம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பஸ்கள் அங்கு வருவதால் நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வெளியூர்களுக்கு குறித்த நேரத்தில் பஸ்கள் செல்ல முடியவில்லை. குறிப்பாக பண்டிகை காலங்களில் சிறப்பு பஸ்களை கையாள்வதிலும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

    கோயம்பேட்டில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க மாதவரத்தில் புதியதாக புறநகர் பஸ்நிலையம் கடந்த 10-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த புதிய புறநகர் பஸ்நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலம் செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    திருப்பதி, நெல்லூர், காளகஸ்தி, சத்தியவேடு, மற்றும் ஐதராபாத் போன்ற நகரங்களுக்கு பஸ்கள் புறப்பட்டு செல்லும் என்று பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து ஆந்திரா மார்க்கமாக 238 தமிழக அரசு பஸ்கள், 25 தனியார் பஸ்கள் மேலும் 205 ஆந்திர மாநில அரசு பேருந்துகள் என மொத்தம் 468 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த பஸ்கள் அனைத்தும் மாதவரம் புதிய புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து இனி இயக்கப்படும் என அறிவித்தும் இதுவரையில் முழுமையாக செயல்பட வில்லை. ஒருசில அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. தனியார் பஸ்களும், ஆந்திர மாநில பஸ்களும் முற்றிலும் இயக்கப் படவில்லை. இதனால் பயணிகள் கூட்டமின்றி எப்போதும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    ஆயுத பூஜை, விஜய தசமியையொட்டி 4 நாட்கள் அரசு தொடர் விடுமுறையாகும். அதனால் கடந்த புதன்கிழமை அன்றே வெளியூர் செல்லும் பஸ்கள் எல்லாம் நிரம்பி வழிந்தது.

    அன்றைய நாளில் கூட மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் முழுமையாக இயக்கப்பட வில்லை. பயணிகள் கோயம்பேட்டில் இருந்துதான் புறப்பட்டு சென்றனர்.

    புதிய பஸ்நிலையம் தொடங்கப்பட்ட நிலையிலும் கோயம்பேட்டில் இருந்து பஸ்களை இயக்கி வருவதால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். புதிய பஸ்நிலையம் தொடங்கியது முதல் இனி ஆந்திர மார்க்க பஸ்கள் அங்கிருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும் பெயர் அளவிற்கு மட்டுமே ஒருசில பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் மாதவரம் புதிய பஸ்நிலையம் களை இழந்து காணப்படுகின்றன.

    பண்டிகை காலங்களில் ஏற்படும் நெரிசலை குறைக்கத்தான் புதிய பேருந்து நிலையம் கட்டி திறக்கப்பட்டாலும் அதனை முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டுவராமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

    தினமும் 468 பஸ்களை மாதவரத்தில் இருந்து இயக்கினால்தான் மக்களுக்கு இந்த தகவல் முழுமையாக தெரியவரும். அவர்கள் தானாக அந்த இடத்திற்கு சென்று விடுவார்கள். ஆனால் அந்த நடவடிக்கையை எடுக்காமல் தொடர்ந்து கோயம்பேட்டில் இருந்து இயக்கி வருகின்றனர்.

    மேலும் மாநகர பஸ்களும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் இதுவரையில் பஸ்நிலையத்திற்குள் எந்த பஸ்சும் வரவில்லை. இணைப்பு மாநகர பஸ்கள் மட்டும் பஸ்நிலையத்திற்கு வெளியே நின்று செல்கின்றன. பஸ்கள் முழுமையாக இயக்கப்படாததால் பயணிகளும் வருவதில்லை.

    இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    புதிய புறநகர் பஸ்நிலையத்தில் இருந்து இன்று முதல் முழுமையாக பஸ்கள் இயக்கப்படும். இதுவரையில் அரசு பஸ்கள் மட்டுமே புறப்பட்டு சென்றன. இன்று முதல் ஆந்திர மாநில அரசு பஸ்களும், தனியார் பஸ்களும் புறப்பட்டு செல்லும். ஆந்திர அரசு பஸ்களுக்கு முன்பதிவு செய்த பயணிகள் தங்களது பயணத்தை மாதவரம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து தொடங்குவார்கள்.

    திருப்பதிக்கு முன்பதிவு செய்த பயணிகளையும் மாதவரத்திற்கு செல்லும் படி அறிவிப்பு வெளியிட்டு வருகிறோம். கோயம்பேட்டில் ஆந்திர மாநில பஸ்கள் நிற்கும் பகுதியில் ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவிக்கிறோம்.

    ஆந்திராவிற்கு செல்லக் கூடிய பயணிகள் மாதவரத்திற்கு செல்ல வேண்டும் எனவும், அங்கிருந்துதான் பஸ்கள் புறப்பட்டு செல்லும் எனவும் அறிவிக்கின்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×