search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவோணம் அருகே பல இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடிய கொள்ளையன் கைது
    X

    திருவோணம் அருகே பல இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடிய கொள்ளையன் கைது

    திருவோணம் அருகே பல இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவோணம்:

    திருவோணத்தை அடுத்த ஊரணிபுரத்தை சேர்ந்த உத்தமநாதன் மகன் ராஜா (வயது 35). இவர் 4 மாதத்துக்கு முன்பு புதிய மோட்டார் சைக்கிள் வாங்கினார். அதனை அவர் ஊரணிபுரம் கடை வீதியில் நிறுத்தி இருந்தபோது மர்ம நபர் திருடி சென்று விட்டான்.

    இதுபற்றி அவர் ஊரணிபுரம் போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மோட்டார் சைக்கிளை திருடிய நபரை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று ஊரணிபுரத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் அருகில் சந்தேகத்துக்கிடமான நிலையில் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்ததால் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தததில் அவர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்தார். அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து திருட்டு போன ராஜாவின் மோட்டார் சைக்கிளை மீட்டனர். மேலும் அவர் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் புதிய மோட்டார் சைக்கிள்களை திருடியதாகவும், வீடுகளுக்கு வேலைக்கு சென்று நோட்டமிட்டு நகை, பணத்தை திருடி வந்ததாகவும் கூறினார்.

    விசாரணையில் அவர் பட்டுகோட்டை லட்சதோப்பு பகுதியை சேர்ந்த காளிதாஸ் மகன் மணிவண்ணன் (22) என்று தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×