search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலகிரியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - துணிப்பை பயன்பாட்டுக்கு மாறிய வியாபாரிகள்
    X

    நீலகிரியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - துணிப்பை பயன்பாட்டுக்கு மாறிய வியாபாரிகள்

    நீலகிரியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் துணிப்பை பயன்பாட்டுக்கு வியாபாரிகள் மாறி இருக்கின்றனர்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ‘உன்னத உதகை‘ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது. நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகள் மூலமாகவும், தன்னார்வ தொண்டு அமைப்புகள் மூலமாகவும் பொதுமக்கள், வணிகர்கள், வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இது தவிர மாவட்டத்தில் உள்ள கடைகளில் அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்வோருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் முன்னாள் ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்டு சுற்றுலா வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அதில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டால், பறிமுதல் செய்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் அதற்கான ரசீது வினியோகிக்கப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    இந்த நிலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், நீலகிரி மாவட்ட வியாபாரிகள் துணிப்பை பயன்பாட்டுக்கு மாறி இருக்கின்றனர். தங்கள் கடைகளில் வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களை துணிப்பையில் போட்டு கொடுத்து வருகின்றனர். மேலும் இறைச்சி கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக வாழை இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. துரித உணவகங்களில் பாக்கு மட்டையால் ஆன தட்டுகள், தேநீர் விற்பனை நிலையங்களில் சில்வர் டம்ளர்களை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கடைகளில் எளிதில் மக்கக்கூடிய பிளாஸ்டிக் பைகளில் உணவு பொருட்கள் பேக்கிங் செய்து தரப்படுகின்றன. மேலும் பேக்கிங் செய்வதற்கு செய்தித்தாள்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தவிர கடைகளுக்கு பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களும் துணிப்பைகளை கொண்டு வருவதால், பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்து வருகிறது. இதனால் பிளாஸ்டிக் ஒழிப்புக்கான மாவட்ட நிர்வாகம் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்க தொடங்கி உள்ளது.

    மேலும் தமிழக அரசும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 
    Next Story
    ×