search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்கள் தாலுகா அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காட்சி.
    X
    கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்கள் தாலுகா அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காட்சி.

    வீ.கே. புதூர் பகுதியில் அனுமதியின்றி கனிம வளங்களை கடத்திய 3 வாகனங்கள் பறிமுதல்

    சுரண்டை அருகே வீ.கே. புதூர் பகுதியில் அனுமதியின்றி கனிம வளங்களை கடத்திய 3 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    சுரண்டை:

    சுரண்டை அருகேயுள்ள ஆனைகுளம் மெயின் ரோட்டில் தாசில்தார் நல்லையா ஆய்விற்காக சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் வந்து கொண்டிருந்த டிராக்டரை மடக்கி சோதனையிட்ட போது அதில் அனுமதியின்றி சரள் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த தாசில்தார் அரசு விதிப்படி நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.

    நேற்று அதிகாலை 6 மணியளவில் வீ.கே. புதூர் பகுதியில் அனுமதியின்றி வெள்ளை நிற நீள கல் கடத்துவதாக தகவல் வந்ததையடுத்து தாசில்தார் நல்லையா தீவிர சோதனை மேற்கொண்டார். அப்போது ஒரு லாரியை மடக்கி சோதனையிட்டு டிரைவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு மாரியப்பன் மகன் பாண்டி (வயது 25) என்பவரிடம் விசாரித்த போது அதில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பையூரணி பகுதியிலிருந்து கனிம வள சட்டத்திற்கு எதிராக வெள்ளை நிற நீள கற்களை அளவுக்கு அதிகமாக கடத்தி வந்ததும், சோதனை நடந்த இடத்திற்கு கொண்டு வருவதற்கான அனுமதியில்லை என்பதும் தெரிய வந்ததையடுத்து அதனை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கைக்கு உயர்அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.

    தொடர்ந்து நேற்று பகல் ஒரு மணியளவில் பரன்குன்றாபுரம் விலக்கு அருகே சோதனையில் ஈடுபட்ட போது வந்த லாரியை மடக்கி டிரைவர் சிங்கிலிப்பட்டியை சேர்ந்த கருத்தசாமி மகன் திருமலைச்சாமி (40) யிடம் விசாரித்த போது பாளையங்கோட்டையிலிருந்து தென்காசிக்கு குறுமணல் 2 யூனிட் கொண்டு செல்ல உரிமை சீட்டு வைத்திருந்ததும் ஆனால் அதில் 4 யூனிட் மணல் கடத்தப்பட்டதும் தெரியவந்ததையடுத்து லாரியை பறிமுதல் செய்து உயரதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.

    ஏற்கனவே பாளையங்கோட்டை பகுதியில் மணல் கடத்தலை தடுத்த தாசில்தார் நல்லையா வீ.கே.புதூர் பகுதியில் மணல், வண்டல், சரள், நீளக்கல், குண்டுக்கல், கருவேல மரங்களை கடத்திய 23 வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதனால் இப்பகுதியில் கனிமவளங்களை கடத்துவது குறைந்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×