search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கெயில் நிறுவனம் குழாய் பதித்ததால் விவசாய நிலங்கள் நீளமாக உள்வாங்கியதால் ஏற்பட்ட பள்ளத்தை படத்தில் காணலாம்.
    X
    கெயில் நிறுவனம் குழாய் பதித்ததால் விவசாய நிலங்கள் நீளமாக உள்வாங்கியதால் ஏற்பட்ட பள்ளத்தை படத்தில் காணலாம்.

    திருவாரூர் அருகே விவசாய நிலங்கள் உள்வாங்கியது- விவசாயிகள் அதிர்ச்சி

    திருவாரூர் அருகே கெயில் நிறுவன குழாய் பதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் உள்வாங்கியதால் விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். #Gail
    திருவாரூர்:

    திருவாரூர் அருகே கள்ளிக்குடி, அடியக்கமங்கலம், கானூர் உள்ளிட்ட கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.

    இந்த நிலையில் கெயில் நிறுவனம், விவசாயிகளின் விளைநிலங்களில் குழித்தோண்டி குழாய்களை பதிக்க முயற்சித்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே கடந்த வாரம் கெயில் நிறுவனம் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் உதவியுடன் விவசாய நிலங்களில் குழாய்களை பதிக்க தொடங்கியது.

    கள்ளிக்குடி, கானூர், அடியக்கமங்கலம் பகுதி விளைநிலங்களில் கெயில் நிறுவனம் அத்துமீறி குழாய்கள் பதித்தது. மேலும் ஜெசிபி எந்திரம் மூலம் தோண்டப்பட்ட நீண்ட பள்ளங்களை சரிவர மூடப்படவில்லை.

    இதனால் கானூர் கிராமத்தை சேர்ந்த 32 விவசாயிகளுக்கு சொந்தமான நிலத்தில் குழாய் பதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் உள்வாங்கியது. நீளமான புதைக்குழிகள் போல காட்சியளித்ததால் அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனால் அந்த பகுதியில் இருந்த 150 ஏக்கர் நிலத்தில் சுமார் 30 சதவீத அளவுக்கு நிலம் உள்வாங்கி இருந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் தற்போது சம்பா சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

    இதுபற்றி அப்பகுதி விவசாயிகள் கூறும் போது, ‘‘கள்ளிக்குடி, கானூர், அடியக்கமங்கலம், கிராமத்தில் விவசாயம் மேற்கொள்ள முடியாத பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு தொகையை கெயில் நிறுவனம் வழங்கவேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகளின் ஆதரவுடன் போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்றனர். #Gail
    Next Story
    ×