என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு சொல்லும் அனைத்துக்கும் நாங்கள் தலையாட்டுவது இல்லை - எடப்பாடி பழனிசாமி
    X

    மத்திய அரசு சொல்லும் அனைத்துக்கும் நாங்கள் தலையாட்டுவது இல்லை - எடப்பாடி பழனிசாமி

    மத்திய அரசு சொல்லும் அனைத்துக்கும் நாங்கள் தலையாட்டுவது இல்லை என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். #edappadipalanisamy #ADMK
    சிதம்பரம் :

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிதம்பரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பொதுப்பணித்துறை சார்ந்த ஏரிகள், உள்ளாட்சித்துறை சார்ந்த ஏரிகள் ஆக மொத்தம் 40 ஆயிரம் ஏரிகள் இருக்கின்றன. இதில் பெரிய ஏரி, சிறிய ஏரி எல்லாம் இருக்கின்றன. பருவ காலங்களில் பெய்கின்ற மழைநீர் முழுமையும் சேமித்து வைக்க வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில், குடிமராமத்து என்ற திட்டத்தை உருவாக்கி, முதல்கட்டமாக பரீட்சார்த்த முறையிலே 1,519 ஏரிகளை தேர்ந்து எடுத்து, 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அந்த பணியை துவக்கினோம், அது வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தை விவசாயிகள் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்கள்.

    இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அம்மாவினுடைய அரசு, இந்த ஆண்டு 328 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 1,511 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு, அந்த பணிகள் துவங்கப்பட்டிருக்கின்றன.

    இந்த குடிமராமத்து திட்டத்தை பார்வையிடுவதற்காகவும், ஆய்வு செய்வதற்காகவும், இந்திய ஆட்சிப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். இது முழுக்க, முழுக்க விவசாய பிரதிநிதி களைக்கொண்ட அமைப்பின் மூலமாக இந்த திட்டம் எடுத்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- நீங்கள் எதுவுமே செய்யவில்லை என்று எதிர்க் கட்சிகள் தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார்களே?

    பதில்:- இதற்கு முன்பு இந்த திட்டத்தை அவர்கள் கொண்டு வந்தார்களா? இல்லையே நாங்கள் கொண்டுவந்ததால் அவர்களால் பொறுக்க முடியவில்லை. ஏனென்றால், இது மிகவும் சிறப்பான திட்டம். இந்த திட்டம் மக்களிடமும் விவசாயிகளிடமும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

    எங்களது அரசின் குடிமராமத்துத் திட்டத்தின் வாயிலாக, பல்வேறு ஏரிகள் ஆழப்படுத்தியதன் விளைவாக, தூர்வாரப்பட்டதன் விளைவாக, சீரமைத்ததன் விளைவாக பெய்கின்ற மழைநீர் முழுவதும் சேமித்து வைக்கக்கூடிய சூழ்நிலை இன்றைக்கு இருக்கின்றது. இதையெல்லாம் பார்த்து அவர்களுக்கு பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

    அவர்கள் காலத்தில் எந்தத் திட்டமும் செய்யவில்லையே, நாங்கள் தானே இந்தத் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம். படிப்படியாக, ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட அளவு ஏரியை தேர்ந்து எடுத்து, சீரமைக்கின்ற பணியை விவசாயிகளிடத்திலே கொடுத்து அந்த பணியை மேற்கொள்வோம். இதுவரைக்கும் டெண்டர் தான் விட்டார்கள். இதற்கு டெண்டர் கிடையாது, முழுக்க முழுக்க அந்த ஏரிக்குட்பட்ட பாசன விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மூலமாக இந்த குடிமராமத்து பணியை நாம் சிறப்பாக செயல்படுத்திக்கொண்டிருக்கின்றோம்.



    அதுமட்டுமல்லாமல், பெய்கின்ற மழைநீர் ஓடைகள், நதிகள் வழியாக கடலில் வீணாக கலக்கின்ற நீரை ஆங்காங்கே தடுத்து நிறுத்தி, நிலத்தடி நீரை உயர்த்தவேண்டும் என்பதற்காக மூன்றாண்டு கால திட்டமாக 1,000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து, இந்த ஆண்டு 62 தடுப்பணைகள் கட்டுவதற்கு இந்த அரசால் 292 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.

    ஆகவே, இப்படி எல்லா மாவட்டங்களிலும் எங்கெங்கெல்லாம் தடுப்பணை கட்ட வேண்டுமோ, அங்கெல்லாம் தடுப்பணை கட்டுவதற்கு உரிய நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது.

    கேள்வி:- மத்திய அரசு சொல்வதை மட்டும் தான் தமிழக அரசு செய்கிறது என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் வருகிறதே?.

    பதில்:- எதிர்க்கட்சியினர் எப்படி வேண்டுமானாலும் பேசலாம், எதிர்க்கட்சியினர் அப்படித்தான் பேசுவார்கள், எங்களை பாராட்டியா பேசப்போகிறார்கள்? கிடையாது. ஜெயலலிதா எப்படி பின்பற்றினார்களோ, அதை நாங்கள் பின்பற்றுகிறோம். எதை எதிர்ப்பாரோ, அதை எதிர்த்தோம். எல்லாவற்றிற்கும் நாங்கள் தலையாட்டுவது கிடையாது.

    கடந்த காலங்களில் தி.மு.க. 14 ஆண்டுகள் மத்தியிலே ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்கள், என்ன திட்டம் கொண்டு வந்தார்கள்? காவிரி நதிநீர் பிரச்சினையைக்கூட அவர்களால் தீர்க்க முடியவில்லை.

    2007-ல் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வந்தது, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தார்கள். தி.மு.க. தலைவர், அவருடைய மகன், பேரன் எல்லோரும் மத்தியில் மந்திரியாக இருந்தார்கள், நினைத்திருந்தால் நிச்சயம் செய்திருக்கலாம். நடுவர்மன்ற தீர்ப்பு 2007-ல் வந்து, இரண்டுமாத காலம் கிடப்பில் போட்ட காரணத்தினால், அதனை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை.

    ஜெயலலிதா சட்டப்போராட்டம் நடத்தி தான் உச்சநீதிமன்றத்தின் மூலமாக, இன்றைக்கு இந்த அரசு, விவசாயிகளினுடைய உரிமையை பெற்றுத்தந்திருக்கின்றது. நமக்கு கிடைக்க வேண்டிய பங்கு நீரை இந்த அரசுதான் பெற்றுத்தந்திருக்கின்றது. ஆகவே, தி.மு.க. கடுகளவும் இதில் ஈடுபடவில்லை, அதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இவர்கள் நினைத்திருந்தால் 2007-லேயே இந்த காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்து குழு, இரண்டையும் அமைத்திருந்தால், அன்றைக்கு ஒதுக்கப்பட்ட நீர் கிடைத்திருக்கும்.

    நடுவர் மன்றத்தீர்ப்பின் அடிப்படையில் 192 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்திருக்கும். அதை சரியான முறையில் அணுகாத காரணத்தினால், அதில் சரியான அக்கறை காட்டாத காரணத்தினால், பதவி ஒன்று தான் வேண்டும், மத்தியில் ஆட்சி அதிகாரம் தான் வேண்டும் என்று நினைத்தார்களே தவிர, தமிழ்நாட்டு மக்களை பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை, அதற்கான முயற்சி எதையும் அவர்கள் எடுக்கவில்லை. இந்த அரசு நீதிமன்றத்திற்கு சென்று, சட்டத்தின் வாயிலாக விவசாயிகளின் உரிமையை பெற்றுத்தந்திருக்கிறது.

    காவிரி மேலாண்மை ஆணையம், காவிரிநீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் அந்தக்குழு கூடி ஒவ்வொரு மாநிலத்திற்கும், அந்தந்த மாநிலத்தில் பெய்கின்ற மழைநீரை கணக்கிட்டு, அதற்குத் தக்கவாறு, நமக்கு வழங்க வேண்டிய நீர் உச்சநீதிமன்றம் அறிவித்தபடி வழங்கப்படும், அதற்குண்டான கூட்டமும் நடைபெற்று முடிந்துவிட்டது. அதற்கான நீரையும் நாம் இரண்டு மாதத்தில் பெற்றுவிட்டோம்.

    அரசை பொறுத்தவரைக்கும், ஏற்கனவே வெட்டப்பட்ட கால்வாய் எந்த அளவுக்கு தண்ணீர் பிடிக்குமோ, அந்த அளவுக்கு நாங்கள் தண்ணீரை திறந்து விடுகிறோம். கடைமடை பகுதியில் வாய்க்காலுக்கு முன்னால் இருக்கின்ற ஏரி, குளங்களை நிரப்புவதற்காக தண்ணீரை திறந்து விட்டிருக்கிறார்கள், ஏரி, குளங்கள் நிரம்பிக்கொண்டிருக்கிறது. நிரம்புகின்ற பொழுது, படிப்படியாக கடைமடை பகுதி முழுவதும் தேவையான நீர் கொடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பதில் அளித்தார். #edappadipalanisamy #ADMK
    Next Story
    ×