search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கோட்டையில் இருந்து கொல்லத்துக்கு ஓரிரு நாளில் ரெயில் போக்குவரத்து
    X

    செங்கோட்டையில் இருந்து கொல்லத்துக்கு ஓரிரு நாளில் ரெயில் போக்குவரத்து

    ரெயில் வழித்தடத்தில் சரிந்த மணல், ராட்சத பாறாங்கல்லை சீரமைக்கும் பணிகள் நிறைவு பெற்றதால் செங்கோட்டையில் இருந்து கொல்லத்துக்கு ஓரிரு நாளில் ரெயில் சேவை இயக்கப்படும் என்று அதிகாரி கூறியுள்ளார்.
    செங்கோட்டை:

    நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து கேரளா மாநிலம் கொல்லம் இடையே அகல ரெயில் பாதை பணிகள் சுமார் 8 ஆண்டுகள் நடைபெற்று தற்போது இந்த வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த தடத்தில் புளியரை முதல் தென்மலைவரை கடினமான பாறைகள் மற்றும் அடர்ந்த வனப்பகுதி ஆகும். இந்த பாதையில் தினமும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் பயணிகள் ரெயிலும் இயக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று கனமழை பெய்ததால் கடந்த 15-ந் தேதி இந்த தடத்திலுள்ள நியூ ஆரியங்காவு, கழுதுருட்டி, எம்செல் தென்மலை உள்ளிட்ட 8 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான பகுதிகளில் கடினமான ராட்சத பாறைகள் ரெயில் தடத்தில் சரிந்து விழுந்தன. தென்மலை குகை முன்பு பெரிய பாறாங்கல் விழுந்தது.

    இதையடுத்து தென்னக ரெயில்வே சார்பில் இந்த பாதையில் ரெயில் சேவையை நிறுத்திவைத்தனர். தொடர்ந்து மண்சரிவை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது தொடர்ந்து சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இப்பணிகள் நிறைவு பெற்றன. இதைத்தொடர்ந்து செங்கோட்டை-புனலூர் தடத்தில் ரெயில் என்ஜினை இயக்கி ரெயில்வே அதிகாரிகள் முதல்கட்ட சோதனை நடத்தினர். நேற்று 2-ம் கட்டமாக தென்னக ரெயில்வே மதுரைகோட்ட பாதுகாப்பு அதிகாரி மனோகரன் தலைமையில் இருப்பு பாதையில் ட்ராலி மூலம் சோதனை நடத்தப்பட்டது. ஆய்வில் இன்னும் ஓரிரு நாளில் இந்த தடத்தில் ரெயில் சேவை இயக்கப்படும் என தெரியவருகிறது.

    இந்த ரெயில் சேவையால் பெரும்பாலான வர்த்தக சேவை முற்றிலும் தடைப்பட்டது. தற்போது மீண்டும் ரெயில் சேவை தொடங்க உள்ளதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×