search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் விளை நிலங்களுக்குள் தண்ணீர் செல்லும் காட்சி
    X
    கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் விளை நிலங்களுக்குள் தண்ணீர் செல்லும் காட்சி

    58-ம் கால்வாய் கரையில் உடைப்பு- விளை நிலங்களுக்குள் புகுந்த வெள்ளம்

    58-ம் கால்வாய் கரையில் உடைப்பு ஏற்பட்டதால் விளை நிலங்களுக்குள் புகுந்த தண்ணீரை அடைக்கும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
    ஆண்டிப்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் பகுதியில் 58 கிராமங்கள் பாசன வசதி பெறுவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் கால்வாய் பாசன திட்டம் கடந்த 1996-ம் ஆண்டு 33.81 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டது.

    இத்திட்டத்துக்கு கடந்த 19.7.1999-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. 19 ஆண்டுகள் பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி பணி நிறைவு பெற்றது. தற்போது வைகை அணை நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் 58 கிராம கால்வாய் திட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து சோதனை ஓட்டம் முறையில் வினாடிக்கு 316 கன அடி வீதம் தண்ணீரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். வைகை அணையில் இருந்து தண்ணீர் செல்லும் பிரதான கால்வாயின் நீளம் 27.64 கிலோ மீட்டர் ஆகும்.

    கிளை கால்வாய்களின் நீளம் 22.17 கிலோ மீட்டர் ஆகும். தொட்டி பாலத்தின் நீளம் 26.50 மீட்டர் ஆகும். பாசனத்தில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் 33 கண்மாய்கள், 3 ஊரணிகளில் தண்ணீர் தேக்கப்பட்டு 2285 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று இரவு 11 மணிக்கு திண்டுக்கல் மாவட்ட எல்லையான தெப்பத்துப்பட்டியை வந்தது. நள்ளிரவில் தொட்டி பாலத்தை கடந்து உத்தப்பாநாயக்கனூர் இரட்டை மதகிற்கு சென்றது. தண்ணீர் சீராக சென்றதால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு சற்று அதிகரிக்கப்பட்டது.

    அப்போது ஆண்டிப்பட்டியில் இருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள டி.புதூர் என்ற இடத்தில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இது குறித்து அப்பகுதி பொதுமக்களுக்கு தெரிய வரவே ஒன்று கூடினர். விளை நிலங்களுக்குள் புகுந்த தண்ணீரை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    கரையை பலப்படுத்தும் வகையில் மணல் மூடைகளைக் கொண்டு அடுக்கினர். மேலும் இது குறித்து பொதுப்பணித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    இது குறித்து அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கையில், நீர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் எடுத்து கூறுகின்றனர். ஆனால் அது குறித்து அவர்களுக்கு எந்தவித உணர்வும் இருப்பதாக தெரிய வில்லை. 19 ஆண்டுகளாக பல கோடி செலவில் உருவாக்கப்பட்ட 58 கிராம கால்வாய் திட்டப்பணி நிறைவடைந்த பிறகு அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பாக உள்ளதா? என அதிகாரிகள் சோதனை நடத்தவில்லை.

    மேலும் ஏதேனும் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டால் எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் தெரியவில்லை. இதன் காரணமாகவே கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    அந்த பகுதியையும், நாங்களே தற்காலிகமாக அடைத்து வைத்துள்ளோம். எனவே மீண்டும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்த பிறகு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்றனர். #tamilnews
    Next Story
    ×